#26 - கருணா சந்தி
பி3ட்ட1வர ப4வபா1ஷதி3ந்த3லி
க1ட்டு1வனு ப3ஹுகடி2ணனிவ சி
ஷ்டே1ஷ்ட1 னெந்த3ரித1னவரத1 சத்ப4க்தி பாஷதலி |
கட்டுவர ப4வகட்டு பி3டி3சுவ
சிட்டிரவனிவனல்ல கா1மத3
கொ1ட்டு கா1வனு சகல சௌக்யவ னிஹபரங்க3ளல்லி ||26
பிட்டவர = தன்னை வணங்காமல் விட்டவர்களை
பவபாஷதிந்தலி = சம்சாரம் என்னும் கயிற்றில் கட்டுவான்
இவ = இந்த பரமாத்மன்
பஹுகடிணனிவ = மிகவும் கடினமானவனைப் போல இருப்பான்
சிஷ்டேஷ்டனெந்து = பக்தர்களின் தெய்வம் என்று
அனவரத = அனைத்து காலங்களிலும்
சத்பக்தி பாஷதலி = உத்தமமான பக்தி என்னும் கயிற்றில்
கட்டுவர = தன்னை கட்டுபவர்களின்
பவகட்டு = சம்சாரம் என்னும் கட்டினை
பிடிசுவ = விடுவிக்கிறான்
சிட்டிரவனிவனல்ல = இவன் (அவர்களின் விஷயத்தில்) கோபப்படுபவன் அல்ல
இஹபரங்களல்லி = இஹ, பர லோகங்களில்
காமத = அவர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் கொடுத்து
காவனு = காப்பாற்றுகிறான்.
பொருள்:
ஸ்ரீபரமாத்மனை யார் பஜிக்காமல் விட்டுவிடுகிறார்களோ, அவர்களை சம்சாரம் என்னும் கயிற்றில் கட்டுகிறான். அவர்களின் விஷயத்தில் மிகக்கடினமானவனாக (கடுமையானவனாக) காட்டிக்கொள்கிறான். தன் பக்தர்களின் ஆபத்துகளை, எப்போதும் பஜித்தவாறு பக்தி என்னும் கயிற்றால் அவனைக் கட்டினால், அத்தகையவர்களுக்கு இருக்கும் சம்சார பந்தங்களை விடுவிக்கிறான். அவர்களிடம் கொஞ்சம்கூட கோபத்தைக் காட்டுவதில்லை. அவரவர்களின் தகுதிக்கேற்ப, அவர்கள் வேண்டும் அனைத்து விதமான விஷயங்களையும் இஹ பரங்களிலும் கொடுத்து, அவர்களை காப்பாற்றுகிறான் (அவர்களுக்கு அருள்கிறான்).
சிறப்புப் பொருள்:
பிட்டவர பவபாஷதிந்தலி கட்டுவனு பஹு கடினனிவ - என்னும் தாசராயரின் வாக்கிற்கு ஆதாரமாக பாகவதத்தில்:
தானஹம் த்விஷத: க்ரூரான் சம்ஸாரேஷுனராதர்மா |
க்ஷிபாம்யஜஸ்ரமஷுபானாசுரேஷ்வேவயோனிஷு: ||
ஆஸுரீம் யோனிமாபன்னாமூடா ஜன்மனி ஜன்மனி |
மாம ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாங்கதிம் ||
’ஹே பார்த்தா! என்னை த்வேஷிக்கும் க்ரூரனான அந்த நர-அதமர்களை நிரந்தரமாக தைத்ய குலத்திலேயே பிறக்க வைக்கிறேன். மூடர்களான அந்த த்வேஷிகள் தொடர்ந்து அனைத்து பிறவிகளிலும் அசுர யோனிகளிலேயே பிறந்து, என்னை த்வேஷித்து, இறுதியில் என்னை சேராமல், அந்தம் தமஸ்ஸிற்குப் போய் சேர்கிறார்கள்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். இதிலிருந்து தன்னை விட்டவரை சம்சார பந்தனத்தில் கட்டுகிறான். அவர்களின் விஷயத்தில் கடினன் என்று தீர்மானமாக சொல்கிறான். பக்தி என்னும் கயிற்றால் தன்னைக் கட்டிய பிரகலாதன், பலி, குசேல முதலானவர்களுக்கு, இஹத்தில் பலவித போகங்களைக் கொடுத்து, அவர்களை சம்சார பந்தனங்களிலிருந்து விடுவித்து, பரலோகத்தில் தன் பாதார விந்தங்களைக் கொடுத்து, பலவித போகங்களைக் கொடுக்கிறான்.
சிட்டினவனிவனல்ல - தன் பக்தர்கள் தவறுகளை செய்தால் அவர்கள் மேல் கோபம் கொள்ளமாட்டான். பாகவத 1ம் ஸ்கந்தம் 14ம் அத்தியாயத்தில் - அர்ஜுனன் சொல்வது: ’சக்ய: சகேவ பித்ருவத்தனயஸ்யசர்வம் சேஹேமஹாமஹித யாகுமதேரகம்மே’ - நண்பன் செய்யும் தவறுகளை நண்பன் எப்படி மன்னிக்கிறானோ, மகனின் தவறுகளை தந்தை எப்படி மன்னிக்கிறாரோ, அப்படி குறைந்த மதியுடைய நான் செய்யும் அனைத்து தவறுகளையும், மகாமகிமையுள்ள ஸ்வாமி மன்னிப்பான் என்று கூறுகிறான். இதிலிருந்து பக்தர்கள் மேல் பகவந்தன் எப்போதும் கோபம் கொள்ளமாட்டான் என்று புலனாகிறது. ஆனால், சில இடங்களில், பரமாத்மன் இந்திராதிகளின் மேல் கோபம் கொண்டதாக கதை இருக்கிறது. அதன் பொருள் என்னவெனில்: பக்தர்கள், அசுர ஆவேசத்தின் பலனாகவோ, கர்வத்தினாலோ தன்னை நிராகரித்தால், அதனை பரிகரித்து, அவர்களுக்கு அருள்வதற்காக அவர்களிடம் கோபம் கொள்வதாக காட்டிக்கொள்கிறான்.
நந்தகோபர்கள் செய்துவந்த யாகத்தைக் கெடுத்து, அவர்களை அவமானம் செய்து, பிரளய காலத்தைப் போல மழை சூறாவளியை இந்திரன் வரச்செய்தபோது, கோவர்த்தன மலையை தன் ஒரு விரலில் ஏந்தி, இந்திரனுக்கு மானபங்கம் செய்து, அவன் கர்வத்தைப் போக்கி, அருளினான். கோபிகா ஸ்த்ரியர்களுக்கு கர்வம் வந்தபோது, அவர்களின் கண்களிலிருந்து மறைந்து, அவர்களை அலைக்கடித்து, கர்வத்தை அடக்கி, பின் அவர்களுக்கு அருளினான். இப்படி பக்தர்களுக்கு அருள்வதற்காகவே அவர்களை திருத்துவான். இது உண்மையான கோபத்தின் காரணமல்ல. ஆகையால் ‘சிட்டினவனிவனல்ல’ என்று சொல்லியிருக்கிறார் தாசராயர்.
***
No comments:
Post a Comment