#21 - வியாப்தி சந்தி
எல்லி கே1ளிதரல்லி நோடித
ரல்லி பே3டித3ரல்லி நீடித3
ரல்லி ஓடித3ரல்லி ஆடித3ரல்லே இருதி1ஹனு |
ப3ல்லித3ரிக3தி1 பல்லித3னு சரி
யில்ல இவகா3வல்லி நோடலு
கு2ல்ல மானவரொல்லன ப்ரதி1மல்ல ஜகக்கெ1ல்ல ||21
எல்லி கேளிதரு = எந்த இடத்தில் கதா ஸ்ரவணம் கேட்டுக் கொண்டிருந்தாலும்
எல்லி நோடிதரு = எந்த சல-அசல பிரதிமைகளில் பார்த்துக் கொண்டிருந்தாலும்
எல்லி பேடிதரு = எந்த பிரம்ம ருத்ராதி தேவதைகளை ஆராதனை செய்து அவர்களை வேண்டினாலும்
எல்லி நீடிதரு = பிரம்ம ருத்ராதிகள் யாரின் தவங்களை மெச்சி வரங்களைக் கொடுத்தாலும்
எல்லி ஓடிதரு = சம்சார சாகரத்தின் பிரச்னைகளை தாங்கமுடியாமல் எங்கு ஓடினாலும்
எல்லி ஆடிதரு = எந்த இடத்தில் பரமாத்மனின் நாமோச்சாரணை செய்து கொண்டிருந்தாலும் அல்லது பகவத் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தாலும்
அல்லி இருதிஹனு = அங்கு இருக்கிறான்
பல்லிதரிகெ = அறிந்தவர்களுக்கு
அதிபல்லிதனு = மிகவும் தெரிந்தவன்
ஆவல்லி நோடலு = எந்த விதத்தில் பார்த்தாலும் / இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும்
இவகெ = இந்த பரமாத்மனுக்கு
சரியில்ல = சமம் இல்லை
குல்லமானவர = கர்வம், பொறாமைகளால் பூரணமான பக்தி இல்லாதவர்களின் / படாடோபமாக பூஜிப்பவர்களின் பூஜைகளை
ஒல்லனு = ஏற்றுக்கொள்வதில்லை
ஜகக்கெல்ல = அனைத்து உலகங்களிலும்
அப்ரதிமல்ல = யாராலும் வெல்லப்பட முடியாதவன்.
ஸ்ரீபரமாத்மனின் கதையைக் கேட்பவர்கள், எந்த இடத்தில் அமர்ந்து அதைக் கேட்டாலும், அங்கு பரமாத்மனும் கேட்பவர்களில் இருந்து, அவனும் கேட்டுக் கொண்டிருக்கிறான். திடமான பக்தியுடன் பரமாத்மனையே நம்பி அவன் கதையைக் கேட்பவர்களுக்கு அங்கேயே தரிசனம் அளிக்கிறான். ஜனக மகாராஜா, தான் பாகவத சப்தாஹம் கேட்பதற்காக கங்கை நதிக்கரையில் ஒரு அழகான பந்தலைக் கட்டி அங்கு ஒரு மனத்துடன் நின்று கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பந்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்று கதையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சனத்குமாரர் புராணத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி கேட்பவர்களின் த்ருடபக்தியை சோதிப்பதற்காக, ஸ்ரீபரமாத்மன் திடீரென்று அந்த பந்தலுக்கு தீ பிடிக்குமாறு செய்தார். தீயைக் கண்டவுடன், அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் பயந்தவாறு அனைத்து திசைகளிலும் ஓடத் துவங்கினர். சனத்குமாரர், மற்றும் கேட்டுக் கொண்டிருந்த ஜனக மகாராஜா இருவர் மட்டுமே அங்கு இருந்தனர்.
மக்கள், ராஜனைக் குறித்து - ‘ஹே ராஜனே, பந்தலில் தீ பிடித்திருக்கிறது. உடனடியாக எழுந்து வந்துவிடவும்’ - என்றனர். சனத்குமாரரை அவரின் உபன்யாசத்தை நிறுத்துமாறு கூறினர். ஆனால் அந்த இருவரும் இந்த கூக்குரல்களை கேட்காமலேயே அமர்ந்திருந்தனர். சனத்குமாரர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, ராஜனோ அதை கேட்டவாறே இருந்தான். நெருப்பில் மண்டபம் முழுக்க எரிந்து போயிற்று. அந்த நெருப்பில், சனத்குமாரர் மற்றும் ஜனக மகாராஜா இருவரும் எரிந்து போயினர் என்று மக்கள் நினைத்தனர். சிறிது நேரத்தில் நெருப்பு அடங்கியது. அப்போது அங்கு வந்து பார்த்த மக்கள், இந்த இருவரும் அப்படியே அமர்ந்திருக்க, புராணம் நடந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
அதைக் கண்டு வருந்திய மக்கள், நாம் அநியாயமாக புராணத்தைக் கேட்காமல் ஓடிவிட்டோம், எங்கு கதா ஸ்ரவணம் நடக்கிறதோ, அங்கு பரமாத்மன் கண்டிப்பாக இருந்தே இருக்கிறான். அத்தகைய பரமாத்மனின் சன்னிதானத்தில் நெருப்பு என்ன செய்துவிட முடியும்? நமக்கு இது தோன்றவில்லையே? ராஜன் திடபக்தி உள்ளவன். அவனை நெருப்பு எதுவும் செய்யவில்லை என்று நினைத்தனர். 18 புராணங்களில் ஒன்றான பிரம்மவைவர்த்த என்னும் புராணத்தில் இந்த கதையை சொல்லியிருக்கின்றனர். ஜனகராஜன் சாட்சாத்தாக அங்கு பரமாத்மனை கண்டான். மற்றும் ஸ்ரீபரமாத்மன் எங்கு பார்த்தாலும் இருக்கிறான். சுகாசார்யர் முதலான ரிஷிகள், எந்த இடத்தில் எந்த பொருட்களில் பார்த்தாலும் அவை அனைத்தையும் பகவத் ஸ்வரூபமாகவே பார்த்தனர். ஆகையால், எங்கு பார்த்தாலும் அங்கு அவன் இருக்கிறான் என்றனர்.
எங்கு வேண்டினாலும் அங்கு இருக்கிறான். அதாவது, பாணாசுரன் ஈஸ்வரனையும், ராவணன் பிரம்மனையும், மற்றும் சிலர் பார்வதி முதலானவர்களையும் வேண்ட, ஸ்ரீபரமாத்மன், பிரம்மாதி தேவதைகளில் தத்ரூபத்தினால் மகிழ்ச்சியடைந்து வரங்களைக் கொடுக்கிறான். பிரம்மாதிகளே வரங்களைக் கொடுக்கின்றனர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், பரமாத்மனே தத்ரூபியாகி இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?
தேன வினா த்ருணமபி ந சலதி - பரமாத்மன் இல்லாமல் பிரம்மாதிகளுக்கு அசையக்கூட சக்தி இருக்காது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதே ஆதாரத்தின்படி, பரமாத்மனே அவர்களின் உள்ளிருந்து வரங்களைக் கொடுக்கிறான் என்று தெரிகிறது. மேலும் பக்தியில் எங்கு வேண்டினாலும் அங்கேயே தரிசனம் அளிக்கிறான் என்னும் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. த்ருவன் காட்டினில் தவம் செய்து வேண்டிக்கொள்ள, அவனுக்கு அங்கேயே தரிசனம் அளித்தான்.
உடல் ஊனமான கூர்மதாஸன், ஆஷாட சுத்த ஏகாதசியன்று, பண்டரிபுரத்து பாண்டுரங்கனை தரிசனம் செய்யமுடியாமல் போய்விட்டதே என்று வருந்த, பாண்டுரங்கன் அவன் இருந்த இடத்திற்கே வந்து நின்றான். புண்டலீகனுக்காக ஆற்றங்கரையிலேயே தரிசனம் அளித்தான். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் பக்தியுடன், இலையையோ, புஷ்பத்தையோ, நீரையோ, பழங்களையோ சமர்ப்பித்தால் அவற்றை அங்கேயே ஏற்றுக்கொள்கிறான்.
எங்கு ஓடினாலும் அங்கு இருக்கிறான். அதாவது, பாகவத 10ம் ஸ்கந்தத்தில் :
மர்த்யோ ம்ருத்யுவ்யாளபீத: பலார்ய லோகான்ஸர்வான்னிர்பயம் நாத்யகர்ப்ப |
த்வத்பாதாப்ஜம் ப்ராப்யயத்ருச்சயாத்ய ஸ்வஸ்த:ஷேதே ம்ருத்யுரஸ்மாதபைதி ||
மரணம் என்னும் பாம்பிற்கு பயந்து மனிதன் இந்த உலகத்தில் எங்கு ஓடினாலும் அங்கு அவனுக்கு மரணம் கண்டிப்பாக உண்டு. அதுவே உன் பாதாரவிந்தங்களில் சேர்ந்தால், அப்போது மரணம் அவர்களை விடுகிறது. அப்போது மனிதன் பயமில்லாமல் நிம்மதியாக தூங்குகிறான். இப்படி மரணத்திற்கு பயந்து, மனிதன் எங்கு ஓடினாலும் ம்ருத்யு ரூபியாக அங்கங்கு பரமாத்மன் கண்டிப்பாக இருக்கிறான். அந்த பரமாத்மனையே நம்பினால் அந்த பயம் தேவையற்றதாக ஆகிறது.
எல்லி ஆடிதரல்லி இருதிஹனு - ஆடிதரெ என்றால் சொன்னால் என்று பொருள். விளையாடு என்னும் இன்னொரு பொருளும் உண்டு. இங்கு இந்த அர்த்தங்களும் சரியாக பொருந்துகின்றன. சிறு குழந்தைகள் மழலைச் சொற்கள் பேசியவாறு விளையாடினால், அந்த குழந்தைகளில் நிலைத்திருந்து பரமாத்மனே விளையாடுகிறான். சக்குபாய் தன் சிறிய வயதில், பொம்மைகளை வைத்து விளையாடும்போது, பாண்டுரங்கனின் பிரதிமையை வைத்து விளையாடி, அவனை வணங்குவதே விளையாட்டு என்று நினைத்து விளையாடினால், அவருக்கு பாண்டுரங்கன் எதிரிலேயே நின்றிருப்பதைப் போல தெரிந்ததாம். ஆடிதரே என்னும் சொல்லுக்கு ’சொன்னால்’ என்ற பொருளில், பிரகலாதன் தன் தந்தையைக் குறித்து - ‘இந்தத் தூணிலும் பரமாத்மன் இருக்கிறான்’ - என்று கூற, ‘சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்’ உண்மையான பக்தனான பிரகலாதனின் வாக்கியத்தை உண்மையாக்குவதற்காக அந்த தூணிலிருந்தே வெளிவந்தான் பரமாத்மன்.
பல்லிதரகதி பல்லிதனு - வேதங்களின் அபிமானியான ரமாதேவி மற்றும் பிரம்மதேவருக்கு பல்லவர்கள் என்று பெயர். ஆனாலும், பகவத் விஷயங்களை முழுமையாக யாரும் அறிய மாட்டார்கள். பரமாத்மனோ, இவர்கள் அனைவரின் ஸ்வரூபங்களையும் நன்றாக அறிவான். இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. நான், எனது என்னும் கர்வத்துடன், படாடோபத்துடன் செய்யும் பூஜைகளை அவன் ஏற்றுக் கொள்வதில்லை.
***