ஸ்ரீரமணி க1ர க1மல பூஜித
சாருசரண சரோஜ பி3ரம்ம ச
மீர வாணி ப2ணீந்த்3ர வீந்த்3ர ப4வேந்த்3ர முக2 வினுத |
நீரஜ ப4வாண்டோ3த3ய ஸ்தி2தி
காரணனே கை1வல்ய தா3யக
நாரசிம்மனே நமிபே1 க1ருணிபுதெ3மகெ3 மங்க3ளவ ||1
ஸ்ரீரமணி = ஸ்ரீ ஆகிய மனைவியின்
கர = கைகளினால்
கமல = தாமரையினால்
பூஜித = பூஜை செய்துக்கொள்ளப்படும்
சாரு = அழகான
சரண = பாதங்கள்
சரோஜ = தாமரையைப் போன்ற
பிரம்ம = பிரம்மர்
சமீர = வாயுதேவர்
வாணி = சரஸ்வதி (& பாரதிதேவி)
பணீந்த்ர = சேஷதேவர்
வீந்த்ர = பறவைகளில் சிறந்தவரான கருடர்
பவ = ருத்ரதேவர்
இந்த்ரமுக = இந்திரன் முதலான அனைத்து தேவதைகள்
வினுத = வணங்கப்படுபவரான
நீரஜபவாண்ட = இந்த பிரம்மாண்டம்
உதய = படைத்தல்
ஸ்திதி = காத்தல்
காரணனே = காரணனான
கைவல்ய = பிரளய காலத்தில் இருக்கும் ‘கேவல’ நாமக ஸ்ரீஹரி
தாயக = கொடுப்பவன்
நாரசிம்ஹ = கம்பத்திலிருந்து வெளிவந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மன். மேலும் தோஷங்கள் இல்லாத முக்த ஜீவர்களுக்கு முக்தியை வழங்கக்கூடிய, நரசிம்மன் என்று அழைக்கப்படும் நாராயணனே (நான் உன்னை)
நமிபே = வணங்குகிறேன்
எமகே = இந்த கிரந்தத்தை படித்து, கேட்பவர்களுக்கு மற்றும் நம் சிஷ்யர்கள் என அனைவருக்கும்
மங்களவா = எந்தவித விக்னங்களில்லாத மங்களங்களை மற்றும் இந்த கிரந்தத்தை படித்து, கேட்பதால் கிடைக்கும் முக்தி என்னும் மங்களத்தை
கருணிபுது = கருணை காட்டுவாயாக
பொருள்:
நரசிம்மனே! ஸ்ரீமன் நாராயண! நீயே இந்த பிரம்மாண்டத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்கு காரணம். ஜீவர்களுக்கு முக்தியை கொடுப்பவனும் நீயாக இருக்கிறாய். சாக்சாத் ஸ்ரீலட்சுமியே உனக்கு மனைவியாக இருக்கிறாள். பிரம்ம ருத்ர ஆகிய அனைத்து தேவதைகளால் வணங்கப்படுகிறாய். இப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன். எனக்கு மற்றும் என் சிஷ்யர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த கிரந்தத்தை கேட்கும், படிக்கும் அனைவருக்கும் முக்தி / மோட்சம் எனப்படும் மங்களத்தை வழங்குவாயாக.
விசேஷமான பொருள்:
கிரந்தங்களை துவக்கும்போது செய்யப்படும் மங்களாசரணத்தில் வணங்கப்படும் தேவதைகள் இரண்டு விதம். கிரந்தத்தில் போற்றப்படும் தேவதை மற்றும் இஷ்ட தேவதை. ஜோதிடம் முதலான கிரந்தங்களை இயற்றும்போது சூரியன் மற்றும் நவக்கிரஹ தேவதைகளை வணங்கி அந்த கிரந்தங்களை தொடங்குவது வழக்கம். இந்த கிரந்தத்திற்கு அந்த பரமாத்மனே சொல்லப்படும் விஷயமாக இருப்பதால், நாரசிம்மனே நமிபே என்று அவரையே வணங்கி துவக்குகிறார். நாரசிம்மனே என்னும் சம்-புத்தி சொல்லுடன், நின்னன்னு என்னும் சொல்லை சேர்த்து, நமிபே என்னும் உத்தமபுருஷக்ரியாபத (Third person verb - படர்க்கை, வினைச்சொல்) உடன் சேர்த்து, நான் என்னும் செய்பவரையும் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்.
நரசிம்மனே, நான் உன்னை வணங்குகிறேன் என்று சொல்வதுபோல் ஆயிற்று. ஆனால், இந்த கிரந்தத்தின் கருப்பொருள் / விஷயம் ஸ்ரீமன் நாராயணன் ஆவான். பாகவத 7ம் ஸ்கந்தத்தில் வரும் நரசிம்ம சரித்திரத்தை மட்டும் இந்த கிரந்தத்தில் சொல்லவில்லை. மேலும் நரசிம்ம ரூபமானது, சர்வேஷ்ட தேவதை என்று போற்றப்படுவதில்லை. சிலர் ராம ரூபத்தை, சிலர் கிருஷ்ணாதி ரூபங்களை தங்களின் இஷ்ட தேவதையாக நினைத்து பூஜிப்பது வழக்கம்.
இந்த கிரந்தத்தில் போற்றப்படும் ரூபமும் இல்லை, சர்வேஷ்ட ரூபமும் இல்லை. அப்படியிருக்கும்போது, ஸ்ரீதாசர் நரசிம்மனை எதற்கு முதலில் வணங்குகிறார் என்றால், ஸ்ரீஜகன்னாததாசரின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர். மேலும் தாசரின் உபாசனா மூர்த்தியும் நரசிம்மனே. ‘பிம்பரூபோபாஸனம் சகார்யம் சத்பக்தி பூர்வகம்’ என்னும் பிரமாண வாக்கியத்தின் அடிப்படையில் இந்த ரூபத்தை முதலில் வணங்குகிறார். மேலும் நரசிம்ம ரூபம் தேவையற்றதை கொடுக்காமல், வேண்டியதை மட்டும் கொடுக்கும் ரூபமாகும். இதற்காகவும் நரசிம்மருக்கும் முதல் வணக்கம் அவசியமாகிறது.
இந்த கிரந்தத்தின் கருப்பொருள் / விஷயம் ஸ்ரீமன் நாராயணன் ஆவான். ஆகவே இரண்டு ரூபங்களுக்கும் ஒரே முறையில் வணங்க வேண்டியதாயிற்று. ஸ்ரீஹரியின் மூலரூபத்திற்கும், ராம கிருஷ்ணாதி அவதாரங்களுக்கும் எந்தவித பேதமும் இல்லை. அப்படியென்றால் இது ராமன், இது கிருஷ்ணன், இது மத்ஸ்யன் என்று பெயரில் மட்டும் எதற்கு பேதம் வருகிறது? ஏனென்றால் ‘நஹிவிக்ருதம் த்யஜந்திகனகஸ்ய ததாத்மதயா’ என்னும் வேதவாக்கியத்துக்கேற்ப, தங்கத்தினால் காப்பு, தோடு முதலான அணிகலன்களை செய்தால், அவை வெவ்வேறு தோற்றம் உள்ளதாகவும், அணியும் அங்கங்களினால் வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றவே தவிர, மூலப்பொருளான தங்கத்தில் எப்படி வேற்றுமை இல்லையோ அதைப் போலவே, மத்ஸ்ய கூர்மாதி ரூபங்களில் பெயர் மட்டுமே வெவ்வேறாக இருக்கின்றதே ஒழிய குணங்கள் முதலானவைகளில் பகவத்ரூபங்களுக்கு எந்தவித பேதங்களும் இல்லை. ஆனால், மக்கள் அனைவருக்கும் அனைத்து ரூபங்களையும் பூஜிக்க அதிகாரம் இல்லை.
தத்ராபி ஹயக்ரீவ நாரசிம்ஹ வராஹகா: |
பார்கவஸ்சாதுராசாரை:னைவசேவ்யா: கதஞ்சன ||
ஏதன்மந்த்ரோபாஸகாயே யதிஸ்யை: பரதாரிண: |
மந்த்ரக்ஷோபோபவேத்தேஷாம் தத்காலேஷு பிஷாசகா: ||
விலம்பேனாபகாரூபி ஜாயதே நாத்ரசம்ஷய: |
ராமகோபாலகிருஷ்ணாத்யா ஹரிதாபூதராச்யுதா: ||
மத்ஸ்யவாமனகூர்மாத்யா: சர்வேஸ்யு: சௌம்யமூர்த்தய: |
நகுப்ஸந்தீதுராசாரை: சதாசாரை: பலாதிகா: ||
மேற்கண்ட விஷ்ணுரகஸ்யத்தின் வாக்கியங்களின்படி, ஹயக்ரீவ, நரசிம்ம, வரகாதி ரூபங்களை வணங்குவோர் மிகவும் ஆசாரத்துடன் இருக்கவேண்டும். அத்தகைய ஆசாரம் இல்லாதவர்கள், மேற்கண்ட ரூபங்களை வணங்கவேகூடாது. அப்படியே இந்த ரூபங்களை வணங்கி, நரசிம்ம மந்திரங்களை ஜபிப்பவர்கள், பிறன் மனை நோக்குபவர்களாக இருந்தால், பிசாசாக அலைவார்கள். அத்தகையவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும். இன்னும் அதிகமான கெட்டபலன்கள் நேரலாம்.
ராம, கிருஷ்ண, வாமனாதி அமைதியான ரூபங்களை குறைந்த ஆசாரத்துடன் வழிபட்டாலும், அவர்களுக்கு கோபம் உண்டாவதில்லை. அதையே ஆசாரத்துடன் செய்தால், அதிக பலன் கிடைக்கும். ஆகவே, இந்த ரூபங்களை யார் வேண்டுமானாலும் வணங்கலாம் என்று சிந்தாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து யார் யாருக்கு எந்த ரூபங்களை வணங்குவதற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிய வருகிறது.
‘நாராயணாய பரிபூர்ண குணார்ணவாய’, “த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தி” இந்த மந்திரங்களினால் மூலரூபங்களை வணங்குவதற்கு எந்தவித விதிகளும் இல்லை. ஆகவே பாரதாதி கிரந்தங்களில் ‘நாராயணம் சுரகுரும்’ மற்றும் ‘பரந்தீமஹி’ என்ற வாக்கியங்களால் மங்களாசரணம் செய்திருக்கிறார்.
ஸ்ரீதாசரின் இஷ்டதெய்வம் மற்றும் உபாஸனா மூர்த்தி இரண்டும் ஸ்ரீநரசிம்மரே ஆவார். கிரந்தத்தில் பூஜிக்கப்படுபவன் - ஸ்ரீமன் நாராயணன். இந்த இரண்டு ரூபங்களையும் ஒரே சொல்லில் வணங்குவதற்காக - ’நாரசிம்மனே’ என்னும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். நரசிம்ம என்னும் சொல், மூலரூபமான நாராயணனைக் குறிக்கும் சொல்லாக ஏற்றுக்கொள்ள முடியாது. நரசிம்ம என்னும் சொல்லை மூலரூபத்தையும் கூடவே அவதார ரூபத்தையும் குறிக்கும் சொல்லாக ஏற்றுக்கொள்ளலாம். நரனின் உடல் மற்றும் சிம்மத்தின் தலை சேர்ந்து நரசிம்மம் ஆனது என்று அவதார ரூபத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதுவே மூலரூபத்திற்கும் பொருந்தும். எப்படியென்றால் - அரா: என்றால் தோஷங்கள் இல்லாதவர். நாரா: என்றால் முக்தர்கள் என்று பொருள். இவர்களுக்கு சிம்மன் என்றால், சிறந்தவன் என்று பொருள். முக்தர்களால் வணங்கப்படுபவன் அல்லது முக்தர்களுக்கு அபயம் அளிப்பவன் என்று பொருள். இன்னொரு பொருள் என்னவென்றால், நார = தோஷங்கள் இல்லாதவன். சிம்ம = ரமா, பிரம்மா ஆகியோரைவிடவும் உத்தமன் என்று பொருள்.
விளக்கம்: சிம்ம என்னும் சொல்லின் மூலச்சொல்லான ’ம்ருகேந்திர’ என்னும் சொல்லை இங்கே பயன்படுத்தினால், ‘ம்ருகயந்தீ இதி ம்ருகா:’. ம்ருகா: என்றால் ரமா பிரம்மாதி தேவதைகள் என்று பொருள். ’யோம்ருகைதி ஹஸ்தக்ருஹீதபத்யயா’ மற்றும் ‘தமேவ தத்ஷாஸ்ரய ப்ருத்யவத்ஸலம் முமுக்ஷுபிர்ம்ருகை பதாப்ஜ பத்ததீம்’ ஆகிய பாகவத வாக்கியங்களே இதற்கு ஆதாரம் எனலாம். ம்ருகாணாம் இந்திர: = ம்ருகேந்திர: என்றால் ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன்.
‘நாரஷ்சாசௌ சிம்ஹஸ்ச நாரசிம்ஹ’ தோஷங்கள் இல்லாதவன், ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன் என்பதால் நரசிம்மன் என்று பெயர். அல்லது ’நாரம் ததாதி நார:’, நார என்றால் தோஷமில்லாத வைகுண்டம் என்று பொருள். தன் பக்தர்களுக்கு இதை கொடுப்பவன் ஆகையால் நார என்று பெயர். இங்கு ’நாரம் ததாதி இதி நாரத:’ என்றும் சொல்லமுடியும். ’நாரம் ததாதி இதி நார:’ - இது எப்படியென்றால் - சுதா கிரந்தத்தில், வைகுண்ட என்னும் சொல்லை பரமாத்மா என்று பொருள் கொள்ளுமாறு, ’வைகுண்ட ததாதி இதி வைகுண்ட:’ - வைகுண்டத்தை கொடுப்பவன் ஆகையால், பரமாத்மனுக்கு வைகுண்டன் என்று பெயர் சொல்லி அங்கேயே நிர்ணயம் செய்தார்.
வைகுண்டத்தைக் கொடுப்பவன் வைகுண்டன் என்றால், கடத்தைக் கொடுப்பவன் கடன் என்று பொருள் கொள்ளலாமா?
ப்ரயோகேசதி நிமித்தானுசரணம்
நதுநிமித்தேசதி ப்ரயோகானுசரணம்
பிரயோகம் இருந்தால், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பிரயோகங்களை செய்யக்கூடாது என்று பொருள்.
எப்படியென்றால், யாராவது ஒருவர் தெருவில், தயிர், காய்கறி விற்றுக்கொண்டு வந்தால், அவர் பெயர் நமக்குத் தெரியாவிட்டால், அவரை ஏ தயிர், ஏ காய்கறி என்று கூப்பிடும் வழக்கம் உண்டு. அப்படியென்றால் அவரே தயிரா? அவரே காய்கறியா? என்று யாரேனும் கேட்டால், எனக்கு அவர் பெயர் தெரியாது. அவர் தயிர், காய்கறி விற்பதால், அவரை அப்படியே கூப்பிடுகிறேன் என்று சொல்லலாம். ஆகவேதான், பிரயோகம் இருந்தால் சந்தர்ப்பத்தை அனுசரித்து பயன்படுத்த வேண்டும் என்று பொருள்.
இதே உதாரணத்தை வைத்துக்கொண்டு, தயிர் கொண்டு வா என்று ஒரு இடையனைச் சொல்லக்கூடாது. ஆகவே பிரயோகத்தை சந்தர்ப்பத்தை அனுசரித்து பயன்படுத்த வேண்டும் என்று ஸ்ரீமன்நியாயசுதாவில் சொல்லியிருக்கிறார்கள்.
இதைப் போலவே, நார(வைகுண்ட)வை கொடுப்பவன் ஆகையால், பரமாத்மனுக்கு நார என்று பெயர். சிம்ம என்னும் சொல்லுக்கு ஏற்கனவே பொருளைப் பார்த்தோம். ஆகவே, நாரசிம்மன் என்னும் பெயர் மூலரூபத்தைக் குறிக்கும் சொல் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது அவதார ரூபத்தையே குறிக்கிறது என்று ஏன் சொல்லக்கூடாது? ஸ்ரீதாசர் மூலரூபத்தையே நினைத்து அப்படிச் சொன்னார் என்று ஏன் சொல்லவேண்டும் என்றால் -
’நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே’ என்று உரிச்சொற்களைப் பயன்படுத்தி ஸ்ரீதாசர் பாடியிருப்பதால், மூலரூபத்தை வணங்குகிறார் என்று சொல்லலாம். அவதார ரூபங்களுக்கு பிரம்மாண்டத்தின் உருவாக்கல் போன்ற வேலைகள் இல்லை. பாகவத முதல் ஸ்கந்தத்தில், ஸ்ரீகிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்திலிருந்து துவாரகைக்குப் போகும்போது, பிராமணர்கள் பரமாத்மனை வணங்கும்போது, ‘அஷ்ரோயந்தாஷிஷ: சத்யாஸ்தத்ரதத்ர த்விஜேரிதா: | நானு ரூபானுரூபாஸ்ச நிர்குண்ஸ்யைகுணாத்மன: ||’ என்று வணங்கினர். இதன் பொருள் என்னவென்றால், பிராமணர்கள் சொல்லும் ஸ்தோத்திரங்கள், ஆங்காங்கே ஸ்ரீகிருஷ்ணனின் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தன. துஷ்டர்களை கொல். சாதுக்களை காப்பாற்று என்னும் பிரார்த்தனைகள், நிர்குணனான அதாவது பிரம்மாண்டத்திற்கு வெளியே வைகுண்டவாசியாக, சத்வ முதலான குணங்கள் நிரம்பிய, எதன்மேலும் பற்றற்று இருந்த மூலரூபத்திற்கு கேட்டது.
படைத்தல் தொழிலாகட்டும், துஷ்டர்களை கொல்லும் செயலாகட்டும், தன் பக்தர்களை காப்பாற்றும் செயல்களாகட்டும் இத்தகைய அவதார ரூபங்களை எடுத்தே செய்வேன் என்று தீர்மானம் செய்துகொண்டிருப்பவன் ஆகையால், அதை எப்போதும் அவன் மீறுவதில்லை.
ஒருமுறை தீர்மானித்துவிட்டால் இந்த மொத்த உலகத்தையே அழிக்கவல்லவன் ஸ்ரீஹரி. ஆனாலும் ராமாவதாரம் செய்து ராவணனை அழிப்பேன் என்றும், கிருஷ்ணாவதாரம் செய்தே கம்சாதி துஷ்டர்களை அழிப்பேன் என்றும் அவனின் சங்கல்பம். ஆகையால் அவனது சங்கல்பத்தை அவனே மீறுவதில்லை.
ஆகையால் பிரம்மாண்டத்தின் உள்ளே எடுக்கப்பட்ட அவதாரங்கள், சத்வாதி குணங்களை ஏற்றுக்கொண்டு, துஷ்டர்களை அழிக்கும் அவதாரங்கள் ஆகையால், பிராமணர்களின் ஸ்லோகங்கள் / வேண்டுகோள்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஒப்புதல் ஆயிற்று. இதுவே பாகவத ஸ்லோகத்தின் பொருளாகும். இதைப்போலவே ஹிரண்யகசிபுவை அழித்து, பிரகலாதனை காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்த நரசிம்ம ரூபம், பிரம்மாண்டத்தின் படைத்தல் ஆகிய தொழில்களுக்கு ஏற்ற ரூபம் அல்ல.
ஆகையால், இங்கு ஸ்ரீதாசர் சொல்லியிருக்கும் நீரஜபவாண்ட முதலான உரிச்சொற்கள், மூலரூபத்தையே குறிப்பதாகையால், ஸ்ரீதாசரின் அபிப்பிராயம், மூலரூபம் மற்றும் அவதாரரூபம் இரண்டையும் சேர்த்து வணங்குகிறார் என்று இந்த ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.
நமிபே (வணங்குகிறேன்) என்ற சொல்லிலிருந்து, வணங்குவதை முக்கியமான செயலாகச் சொல்கிறார். ‘அதாதோ பிரம்மஜிக்ஞாசா’, ‘சத்யம் பரம் தீமஹி’, ‘பர்கோ தேவஸ்ய தீமஹி’, ஆகிய பிரம்மசூத்ர, பாகவத, காயத்ரி ஸ்லோகங்களிலிருந்து, தியானமே முக்திக்கு வழி என்று தெரிவதால், மங்களாசரணத்தில் தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
’நமஸ்கரிசுத்தேனே’ என்று இந்த கிரந்தத்தில் வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் என்னவென்றால், அதிகாரிகளைப் பொறுத்து, செய்யக்கூடிய செயல்களும் மாறுபடும். பிரம்மசூத்திரம், பாகவதாதிகளுக்கு தேவதைகளே அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார். பாகவதத்தில், ‘நிர்மத்ஸராணாம் சதாம்வேதம்’ என்று அதிகாரிகளைப் பற்றி சொல்லும்போது, தன்னைவிட உயர்ந்தவர்களிடத்தில் பொறாமை கொள்ளாதவர்கள் யாரோ, அவரே அதிகாரிகள் என்று சொல்லியிருப்பதால், உத்தமர்கள் மற்றும் தாழ்ந்த ஜீவர்கள் என்று யாரையும் கண்டுபிடிக்க முடியாததாலும், அத்தகைய உயர்ந்த ஞானம் தேவாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கும்; மனிதர்களுக்கு இருக்காது என்ற காரணத்தினால், தேவதைகளே அல்லது தேவதை அம்சம் பொருந்தியவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் என்று சொல்வதாக ஆயிற்று.
ஆகவே பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தியானமானது, உத்தமஜீவிகளான ஞானியோகிகளுக்கும் பக்தியோகிகளுக்கும் மட்டுமே சாத்தியம் ஆகுமே தவிர, சாதாரண செயல்களைச் செய்துவரும் மனிதர்களுக்கு ‘கர்மணா ஞானமாதனோதி’ ‘கர்மண்யைவஹி சம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய: குருகர்மைவ கௌந்தேய’ என்று பல ஸ்லோகங்களில் சொல்லி, பிறகு படிப்படியாக பக்தி அதிகரித்து, பகவானின் மகிமைகளை அறிந்து அதன்பிறகு தியானம் செய்வதற்கு தகுதி பெறுவார்கள் என்று சொல்வதற்காகவே ‘நமிபே’ என்னும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதாசர்.
நமஸ்காரம் என்பதும்கூட தியானம் இல்லாமல் தனியாகச் செய்யப்படுவது இல்லை. வெறும் கை கூப்புவதோ, கீழே விழுந்து வணங்குவதோ இல்லை. சாஷ்டாங்கமாக விழுவதே நமஸ்காரம். சாஷ்டாங்கம் என்றால் - உரஸா ஷிரஸா த்ருஷ்ட்வா மனஸா வசஸா ததா | பத்ப்யாம் கராம்ப்யாம் ஜானுப்யாம் ப்ரணாமோஷ்டாங்க ஈரித: - இதயம், தலை, பாதங்கள், கைகள், கால் முட்டிகள் ஆகியவை நிலத்தில் பதியுமாறு, கண்களால் பார்த்தவாறு, மனதினால் நினைத்தவாறு, வாயினால் ஸ்தோத்திரம் செய்தவாறு செய்யும் நமஸ்காரத்திற்கு சாஷ்டாங்கம் என்று பெயர். மனுஷ்யோத்தமர்களுக்கு இதுவே முக்திக்கான வழி. இதைப் பற்றி ஸ்ரீமதாசார்யர் சொல்வது:
ஏகோபி கிருஷ்ணஸ்ய சக்ருத்ப்ரணாமோ தஷாஷ்வ மேதாவப்ருதேனதுல்ய: |
தஷாஷ்வமேதீ புனரேதி ஜன்ம க்ருஷ்ணப்ரணாமோ நபுனர்பவாய||
பொருள்:
ஸ்ரீஹரியைக் குறித்து ஒரே ஒரு நமஸ்காரத்தையாவது விதிப்படி சாஷ்டாங்கமாக செய்தால், 10 அஸ்வமேத யாகம் செய்து, அவப்ருத ஸ்னானம் செய்தவனுக்கு எவ்வளவு பலன் வருமோ, அவ்வளவு பலன் வரும். ஆனால், பத்து அஸ்வமேத யாகம் செய்தவன் சுவர்க்கத்திற்குச் சென்று அவனின் புண்ணியம் குறையும் வரைக்கும் இருந்து, பின் மறுபடி பூமியில் பிறப்பான். ஸ்ரீகிருஷ்ணனை வணங்கியவன், முக்தியை அடைந்து, பத்து அஸ்வமேத யாகம் செய்தவன் சுவர்க்கத்தில் அனுபவித்த பலன்களை, இவன் நிரந்தரமாக அனுபவிப்பான். இவனுக்கு மறுஜென்மம் கிடையாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஆகையால், முதலில் தியானத்துடன் கூடிய நமஸ்காரங்களை செய்து, இறையருளைப் பெற்று, பிறகு, தியானத்தினாலேயே முக்தியைப் பெறமுடியும் என்ற சிந்தனையுடன் தாசராயர், நமிபெ என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கவேண்டும். இதன் கருத்து என்னவென்றால், இந்த கிரந்தத்தை கேட்க, படிக்க முயலும்போது, நமஸ்காரங்களை செய்து, இறையருளைப் பெற்று, அடுத்தடுத்த சந்திகளைப் படித்து வந்தால், தியானம் மற்றும் ஞானம் இரண்டும் கிடைக்கும். ஆகவே முதலிலேயே ’நமிபெ’ என்னும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார் தாசராயர் என்று நினைக்கவேண்டும். இப்படி நினைத்து இந்த படிகளை ஏறியவரே, பாகவதாதிகளைப் படிப்பதற்கு தகுதி பெற்றவர் என்று சொல்வதாயிற்று.
‘நாரசிம்ஹனே நமிபெ’ என்று சொன்னதாலேயே மங்களாசரணம் சொன்னது போலாயிற்று. அடுத்தடுத்த சொற்களை ஏன் சொன்னார்?
பரமாத்மனை தியானம் செய்து நமஸ்காரங்களை செய்யவேண்டுமெனில், வஸ்து ஞானம் தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் இருப்பவனான பகவந்தனை தியானம் செய்வது என்றால் எப்படி? அதற்கு அந்த பரமாத்மனின் ஸ்வரூப ஞானம் அவசியம். ஸ்வரூப ஞானம் என்பது உபதேசம் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். எப்படியெனில்: ஒருவன் தான் எப்பொழுதும் கண்டிராத ஒரு பொருளைக் கண்டால், அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தானே அதனை தெரிந்து கொள்வது சாத்தியம் இல்லை. ஒரு பொருளை நாம் பார்த்திராவிடினும், அதன் லட்சணங்களை யாரேனும் நமக்கு உபதேசம் செய்திருந்தால், அத்தகைய பொருளை நாம் பார்த்தால், நாம் உபதேசம் பெற்ற பொருள் இதுவே என்று தெரிந்து கொள்ளலாம்.
உதாரணம்: பசுவைப் பார்த்திராத ஒரு குழந்தைக்கு பசுவைக் காட்டினால், அந்தக் குழந்தை அந்த பசுவின் வெள்ளை வண்ணத்தை வைத்தே அடையாளம் கொள்ளும். ஆகையால், பசுவைக் காட்டி சொல்வதைவிட, அதன் லட்சணங்களை நன்கு விளக்கிவிட்டால், அடுத்த முறை அந்தக் குழந்தை பசுவைப் பார்க்கும்போது தானே அடையாளம் கண்டுகொள்ளும்.
அதாவது: ‘சாஸ்னாதி மான் கௌ:’ - எந்த பசுவின் கழுத்தில் தோல் தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அதுவே பசு என்று உபதேசம் செய்தால், இந்த லட்சணம் பசுவை விட்டு வேறு எந்த மிருகத்திற்கும் இருப்பதில்லை. ஆகையால் யாராக இருந்தாலும், இந்த அடையாளத்தினாலேயே பசுவை கண்டுகொள்ள முடியும். ஆகையால், எந்த லட்சணம் பரமாத்மனின் ஸ்வரூபத்தைக் காட்டுகிறதோ, பரமாத்மனைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாதோ, அத்தகைய லட்சணத்தை உபதேசம் செய்தால், இத்தகைய லட்சணங்கள் உள்ளவன் பரமாத்மன் மட்டுமே என்று நிச்சயமான ஞானத்தினால் அந்த பரமாத்மனைக் குறித்து உபாசனை செய்யமுடியும். ஆகவே இங்கு தாசராயர், ‘ஸ்ரீரமணி கரகமல பூஜித’ என்னும் வாக்கியத்தினால் ஸ்ரீபரமாத்மனின் லட்சணங்களை நமக்கு விளக்கியிருக்கிறார்.
பரமாத்மனின் லட்சணங்கள் என்று, தாசராயர் தனது கற்பனையில் வந்தவற்றை சொல்லவில்லை. ஸ்ரீவேதவியாசர் தமது பிரம்மசூத்திர பாகவதாதி கிரந்தங்களில், எந்த லட்சணங்களை, ‘ஜன்மாத்யஸ்யயத:’ என்னும் சூத்திரத்தினாலும், ‘ஜன்மாத்யஸ்ய யதோன்வயாத்’ என்னும் ஸ்லோகத்தினாலும் விளக்கியிருக்கிறாரோ, அத்தகைய லட்சணங்களையே இங்கும் சொல்லியிருக்கிறார். அதாவது: ‘நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே கைவல்யதாயக’ என்கிறார். ’கேவலோ பகவான்விஷ்ணு: கைவல்யம் பரமம்பதம்’ - அதாவது அனாதி காலத்திலிருந்து முடிவில்லா காலம் வரைக்கும் பரமாத்மனே சுதந்திரமாக தான் மட்டுமே இருப்பதனால், ‘கேவலன்’ என்று அவனுக்கு பெயர் வந்தது. அவன் வசிக்கும் இடத்திற்கு கைவல்ய என்று பெயர். அதாவது அதுவே வைகுண்டம் என்று அறியவேண்டும். அப்படியே பிரளய காலத்திலும், பரமாத்மன் ஒருவனே தனியாக வசிப்பதால், பிரளயத்திற்கும் கைவல்ய என்றே பெயர் உண்டு.
இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால், ‘நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே’ என்னும் வாக்கியத்தினால், பிரம்மாண்டத்தின் படைப்பிற்கும், காத்தலுக்கும் மட்டுமே பகவந்தன் காரணன் என்று தெரிகிறது. ஆனால் பிரளயத்திற்கும் அவனே காரணன். ஆகையால், ‘கைவல்யதாயக’ என்னும் சொல்லினால், பிரளய காலத்திற்கும், முக்தியைக் கொடுப்பதற்கும் அவனே காரணன் என்று சொல்வதற்காக, கைவல்ய என்னும் ஒரு சொல்லே போதும் என்பதால், பிரளயம் மற்றும் முக்தியை தனித்தனியாக சொல்லாமல், தாசராயர், கைவல்யதாயக என்றே சொல்கிறார். ஆனால் நாம் கைவல்யதாயக என்னும் சொல்லை இரு முறை சொல்லி பொருள் கொள்ளவேண்டும் என்பது மறைபொருள்.
நீரஜபவாண்ட என்றால் பிரம்மாண்டம். அதன் உதயம் என்றால், படைத்தல், காத்தல். இதனுடன் நாசம் (பிரளயம்) மற்றும் நியமனம், ஞான, அஞ்ஞான, பந்த, மோக்ஷ என்னும் ஐந்தையும் சேர்த்துக் கொண்டு, படைத்தல் முதலான எட்டு வித வேலைகளையும் பரமாத்மாவினுடையதே என்று சொல்லவேண்டும். இப்படி எட்டு வித வேலைகளை ஏன் சொல்லவேண்டும் என்றால், ஸ்ரீமதாசார்யர், பிரம்மசூத்ர பாஷ்யத்தில் ‘உத்பத்தி ஸ்திதி சம்ஹாரானியதிர்ஞான மாவ்ருதி: | பந்த மோக்ஷௌச புருஷாத்யஸ்யாத் ஸஹரிரேகராட்’ என்று சொல்லியிருக்கிறார்.
இந்த ஆதாரத்தினாலேயே, அஷ்ட கர்த்ருத்வவும் பரமாத்மாவினுடையதே என்று சொல்லவேண்டும். ஆனால், தாசராயர், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஏன் எட்டு வேலைகளையும் சொல்லவில்லை என்றால், எப்போது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று முக்கியமான வேலைகளை சொன்னாரோ, இதர ஐந்து வேலைகளும் பரமாத்மாவினுடையதே என்று தானாக அறிந்து கொள்ளலாம் என்பதால் அவற்றை விட்டுவிட்டார்.
அப்படியெனில், ஸ்ரீமதாசார்யர் ஏன் எட்டினையும் தனித்தனியாக சொன்னார் என்றால், எந்தவொரு இடத்திலும் இவற்றை தெளிவாக சொல்லவில்லையெனில், அவற்றிற்கு வேறு யாரும் காரணம் என்ற நினைப்பு வந்துவிடுமோ என்ற எண்ணத்தில், தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால், இவற்றிற்கு பரமாத்மனே காரணம் என்று எந்த ஆதாரத்தில் சொல்லவேண்டும்?
எந்தவொரு சித்தாந்தத்தையும் விளக்கவேண்டுமெனில், பிரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் - இம்மூன்றில் ஒன்றை சொல்லவேண்டும். இப்பொது இந்த உலகத்தை பிரத்யக்ஷமாக பார்க்கிறோம். இதை யாரோ ஒருவர் படைத்திருக்கவேண்டும் என்பது அனுமானம். தாய் தந்தையர் இல்லாமல் குழந்தைகள் வரமுடியாது என்றும், யாரேனும் கட்டாமல் கட்டிடம் வராது என்பதும் நம் அனுபவத்திலிருந்து தெரிய வருகிறது. ஒருவரைப் பார்த்தால் இவருக்கு ஒரு பெற்றோர் இருக்கவேண்டும் என்றும், ஒரு கட்டிடத்தைப் பார்த்தால், இதைக் கட்டியவர் ஒருவர் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படியே, பிரத்யக்ஷமான இந்த உலகத்தைப் பார்த்தால், இதனை படைத்தவர் ஒருவர் இருக்கவேண்டும் என்று நினைக்க வேண்டும். இதற்கு ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். பரமாத்மனே இந்த உலகத்தைப் படைத்து காத்து வருகிறான் என்பதற்கு வேதங்களையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும்.
’யதோவா இமானிபூதானிஜாயந்தே | யோனஜாதானி ஜீவந்தியஸ்சயந்த்யபி சம்விஷந்தீதி ||’
’அஹம்சர்வஸ்ய பிரபவோ மத்தஸ்சர்வம் ப்ரவர்ததே | ஸ்ரஷ்டாபாதா ததைவாத்தா நிகிலஸ்யைக ஏவது ||’
மேற்கண்ட வேத வாக்கியங்களே தகுந்த ஆதாரங்களாகும். அப்படியெனில், இதே வேதங்களில், பிரம்மதேவரே படைப்பவர் என்றும், ருத்ரரே அழிப்பவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. இதில் எது உண்மை? எது பொய் என்றால், வேதங்களில் வெகுசில இடங்களில் மட்டுமே இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அனைத்து வேதங்களும், ஸ்ரீமன் நாராயணனே படைத்தல் முதலான தொழில்களை செய்பவன் என்றும், வேதங்களால் புகழப்படுபவன் என்றும் சொல்கின்றன. ஓரிரு இடங்களில் பிரம்ம ருத்ரரைப் பற்றி சொல்பவை, அந்தப் பெயர்களினால் அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனையே சொல்கின்றனவே தவிர, பரமாத்மனின் நாபிக் கமலத்திலிருந்து பிறந்த பிரம்மதேவரையோ, அவரிடமிருந்து பிறந்த ருத்ரரையோ சொல்வதில்லை. இந்த விஷயத்திற்கும் வேதங்களில் ஆதாரம் உண்டு.
’யோதேவானம் நாமதா ஏகஏவ’. பிரம்ம ருத்ரர் இந்திராதி அனைத்து தேவதைகளின் பெயர்களையும் தாங்கி, யார் அனைவருக்கும் தந்தையாகி இருக்கிறானோ, தாயாகி இருந்து அனைத்து உலகத்தையும் படைத்திருக்கிறானோ, அனைத்தையும் அழிப்பவனாகவும் இருக்கிறானோ, அத்தகையவனை நாம் வணங்குவோம்.
‘ருஜந்த்ராவயதே யஸ்மாத்ருத்ர ஐத்யபிஷப்த்யதே’. அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியவன் ஆகையால், பரமாத்மனுக்கே ருத்ரர் என்று பெயர். ’பிரம்மபூர்ணா வித்யஸ்மாத்தாதோ:’. அனைத்து நற்குணங்களையும் கொண்டவன் ஆகையால், பரமாத்மனுக்கே பிரம்மன் என்று பெயர். ’பிரம்ம விஷ்ண்வேஷரூபாணி த்ரீணி விஷ்ணோர்மஹாத்மன: பிரம்மணி பிரம்மரூபர்ஸ் சஷிரூபி ஷிவேஸ்மித:’ ஸ்ரீவிஷ்ணுவிற்கு பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வர என்று மூன்று பெயர்கள் உண்டு.
நான்முக பிரம்மதேவரிடம் பிரம்ம பெயர் கொண்ட பரமாத்மன் இருந்து, படைத்தலை செய்கிறான். ருத்ரர் என்னும் பெயர் கொண்ட பரமாத்மன், ருத்ரரிடம் இருந்து, சம்ஹாரத்தை செய்கிறான். ஆகையாலேயே, பிரம்மதேவர் படைக்கும் தொழிலை செய்கிறார் என்றும், ருத்ரர் சம்ஹாரத்தை செய்கிறார் என்றும், ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தகைய பற்பல ஆதாரங்களினால், பரமாத்மனையே வேதங்கள், பிரம்ம ருத்ரர் ஆகிய சொற்களினால் புகழ்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து பெயர்களாலும் அழைக்கப்படுபவனாகிய ஸ்ரீபரமாத்மன், நாராயணன் முதலான சில பெயர்களை மட்டும் தான் வைத்துக்கொண்டு, பிரம்ம, ருத்ரர் முதலான தன் பெயர்களையே பிற தேவதைகளுக்கு கொடுத்திருப்பதால், அவர்களுக்கு அத்தகைய பெயர்கள் வந்திருக்கின்றன என்று அறியவேண்டும். இந்த விஷயத்தை ஸ்ரீமதாசார்யர் பிரம்மசூத்திர பாஷ்யத்தில் மிகவும் விளக்கமாகக் கூறியிருக்கிறார். மேலும் ‘கைவல்யதாயக’ என்னும் காரணப் பெயர், மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய விஷ்ணு ஒருவருக்கு மட்டும் உண்டே தவிர வேறு எந்த தேவதைகளுக்கும் இல்லை.
‘விஷ்ணுர்ஹிதாதாமோக்ஷஸ்ய வாயுஸ்தததனுக்ஞயா’ அதாவது வழியைக் காட்டுபவன் ஒருவனே. விஷ்ணுவின் அனுமதியைப் பெற்று வாயுதேவர் கொடுக்கிறார் என்னும் ஆதாரத்தினால், பரமாத்மனே சர்வோத்தமன் என்றும், ஜகத் ஜன்மாதி காரியங்களை செய்பவன் என்றும், தாசராயர் கூறுகிறார். ‘பிரம்மசமீரவாணி பணீந்திரவீந்திர பவேந்திரமுகவினுத’ - பிரம்மன் முதலான அனைத்து தேவதைகளினால் வணங்கப்படுபவன் என்று சொல்வதாலும், ஸ்ரீவிஷ்ணுவின் சர்வோத்தமத்வத்தை நிர்ணயிக்கிறார்.
பாகவதத்தில் 12ம் ஸ்கந்தத்தில் வரும் - ‘யம் பிரம்மாவருணேந்திர ருத்ரமருத: ஸ்துன்வந்தி திவ்யைஸ்தவை:’ என்னும் வாக்கியம் இதற்கு ஆதாரமாக உள்ளது. மேலும் இரண்டாம் ஸ்கந்தத்தில், பிரம்மதேவர் தனது மகனான நாரதருக்கு உபதேசம் செய்யும் நேரத்தில் இவ்வாறு சொல்கிறார். ‘ஸ்ருஜாமி தன்னியுக்தோஹம் ஹரோஹரதி தத்வஷ: | விஷ்வம்புருஷரூபேண பரிபாதி த்ரிஷக்திபுக்’. நான் அந்த பரமாத்மனின் அதீனத்தில் இருந்து படைத்தல் தொழிலை செய்கிறேன். ருத்ரர் அவனின் அதீனத்தில் இருந்து அழிக்கின்றான். புருஷ ரூபத்தில் இருந்து விஷ்ணுவே அனைத்தையும் காக்கிறான். இப்படியாக, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வித வேலைகளும் பரமாத்மனுடையதே ஆகும். அதாவது, என்னுள் இருந்து படைப்பவனும், ருத்ரரின் உள் இருந்து அழிப்பவனும், அவனே. ஆகையால் இந்த மூன்று வேலையும் பரமாத்மனுடையதே என்று அறி.
நாஹம், நயூயம்பததத்கதிம் விதுர்னவாமதேவ: கிமுதாபரேசுரா: |
யன்மாயயா மோஹித புத்தயஸ்விதம் வினிர்மிதம் ஸ்வாத்மசமம் விசக்ஷ்மஹே ||
நான் அந்த பகவத் ரூபத்தை முழுமையாக அறிய முடியாது. உன்னாலும் முடியாது. வாமதேவன் என்றால் ருத்ரதேவரால் அவரை அறிய முடியாது. இப்படிப்பவர்களாலே முடியவில்லை என்றால், மற்ற தேவதைகளைப் பற்றி என்ன சொல்ல? அவனின் சக்தியில் கட்டுப்பட்டு, அவனால் உருவாக்கப்பட்ட இந்த உலகத்தை அவனுக்கு சமமாகவே நினைக்கிறோம். அல்லது இதை உருவாக்கிய பகவந்தனை ‘ஸ்வாத்மசமம் விசக்ஷ்மஹே’. நம் தகுதிக்கேற்பவே அறிந்து கொள்கிறோம். இப்படியாக பிரம்மன் தனது மகனான நாரதருக்கு உபதேசம் செய்திருப்பதால், இந்த வசனமே, பரமாத்மன் பிரம்மாதி அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவன் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.
மேலும் இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் உதாரணமாகக் காட்டுகிறார் தாசராயர். ‘ஸ்ரீரமணி கரமகல பூஜித சாருசரண சரோஜ’. இந்த வாக்கியம் லட்சுமிவல்லபனைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. தன் மனைவியான லட்சுமிதேவியின் மூலமாக பூஜிக்கப்படும் அழகான பாதங்களைக் கொண்டவன் என்று சொல்வது, பிரம்மாதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவன் என்பதையும் சொல்கிறது. எப்படியெனில், அம்ப்ரிணி சூக்தத்தில் இருக்கும் லட்சுமிதேவியின் வாக்கியம். ‘யம் காமயேதம் தமுக்ரம் க்ருணோமிதம் பிரம்மாணம் தம்ரிஷிம் தம்சுமேதாம்’. அதாவது யாரை ருத்ரராக நியமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அவரை ருத்ரராக நியமிக்கிறேன். யாரை பிரம்மனாக நியமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அவரை பிரம்மனாக நியமிக்கிறேன்.
இப்படியாக லட்சுமிதேவி, பிரம்மருத்ரர்களை நியமிக்கும் உரிமை தனக்கு இருக்கிறது என்று சொல்லி இறுதியில், ‘மமயோனி ரப்ஸ்வா அந்தஸ்சமுத்ரே’ இப்படிப்பட்ட எனக்கு தலைவனானவன், சர்வாந்தர்யாமியான, பாற்கடலில் படுத்திருக்கும் ஸ்ரீபரமாத்மனே. அத்தகையவனின் அருளினாலேயே எனக்கு இந்த சக்தி உண்டாயிற்று என்று சொல்லியிருப்பார். இப்படி, பிரம்ம ருத்ரர்களை படைக்கும் ஆற்றல் கொண்ட ரமாதேவியால் பூஜை செய்யப்படும் பாதங்களைக் கொண்டவன் என்று சொன்னபிறகு ஹரி சர்வோத்தமன் என்று சொல்லும் விஷயத்திற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?
இத்தகைய நற்குணங்களைக் கொண்டவனான, தோஷங்கள் அற்றவனான ஸ்ரீமன் நாராயணனே ! நான் உன்னை வணங்குகிறேன். எனக்கு மங்களத்தை அளிப்பாயாக என்பதே இந்த ஸ்லோகத்தின் சாரம் ஆகும்.
‘ஜன்மாத்யஸ்ய யதோன்வயாதிதரத:’ என்னும் பாகவதத்தின் மங்களாசரண ஸ்லோகத்தில் எந்த அர்த்தத்தை சொல்லியிருப்பாரோ, அதே அர்த்தத்தையே மேலும் விளக்குமாறு பாகவத தாத்பர்ய நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பார்.
ஸ்ருஷ்டிஸ்தித்யப்யயே ஹானியதித்தஷிதமோ பந்தமோக்ஷாஸ்ச யஸ்மா
தஸ்ய ஸ்ரீபிரம்மருத்ர பிரப்ருதிசுரநரத்தீஷ ஷத்வாத்மகஸ்ய |
விஷ்ணோர்யஸ்தா: சமஸ்தா: சகலகுணநிதி: சர்வதோஷவ்யபேத:
பூர்ணானந்தோவவ்யயோ யோ குருரபி பரமஸ்சிந்தயே தம் மஹாந்தம் ||
பொருள்:
பிரம்ம, ருத்ர முதலான தேவதைகள், மனிதர்கள், தைத்யர்கள் மற்றும் அசையும், அசையாப் பொருட்களைக் கொண்ட இந்த உலகத்தை, எந்த இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், ஞானம், அஞ்ஞானம், பந்தம், மோட்சம் ஆகிய அனைத்தையும் அவரவர்களின் தகுதிக்கேற்ப கொடுக்கிறானோ, யார் அனைத்து குணங்களின் நிதியாகி இருக்கிறானோ, எந்தவித தோஷங்களும் அற்றவனோ, ஜகத்குருவாக இருக்கிறானோ, சர்வோத்தமனோ அத்தகைய மகானை நான் வணங்குகிறேன்.
இதே பொருளையே ஒரு வரியும் விடாமல், ஸ்ரீமதாசார்யரின் சொல்லிற்கு உரையைப் போல, தாசராயர் தனது மங்களாசரண ஸ்லோகத்தில் எழுதியிருக்கிறார்.
’ஸ்ரீரமணி கரகமல பூஜித’ என்னும் வாக்கியத்தின் பொருளை உணர்ந்தால், மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள் அப்படியே வந்திருப்பதை உணரலாம். மேலும் இந்த ஸ்லோகத்தின் பொருளையும், சொற்களின் பொருளையும் விளக்கிக் கொண்டே போனால், இந்த கிரந்தம் மேலும் நீளமாகிவிடும் என்னும் காரணத்தினால், நாம் மேலும் எழுதவில்லை.
காயத்ரி வேதங்களின் தாய் என்று கருதப்படுகிறாள். இந்த வேதாந்தங்களின் பொருள் அனைத்தும் இந்த கிரந்தத்திலேயே இருக்கிறது என்று சொல்வதற்காக இந்த ஸ்லோகத்தில் காயத்ரியின் பொருளும் இருப்பதை பார்க்கலாம். அதாவது - ‘தத்சவிதுர் வரேண்யம் ! பர்கோ தேவஸ்ய தீமஹி ! தியோயோன: ப்ரசோதயாத்’. இதன் பொருள்.
ய: - யார்.
ந: - நமக்கு.
திய: - அறிவை.
ப்ரசோதயாத் - கொடுக்கிறானோ.
தஸ்ய - அப்படிப்பட்ட.
தேவஸ்ய - படைத்தல் முதலான தொழிலை விளையாட்டாக (எந்தவித ஆயாசமும் இல்லாமல்) செய்பவன்.
சவிது: - படைப்பவனான சூரிய நாமகனான ஸ்ரீமன் நாராயணன்
வரேண்யம் - பிரம்மாதி அனைத்து தேவதைகளால் வணங்கப்படுபவனான.
பர்க: - ஒளியின் ரூபமான
வபு: - உடலை
தீமஹி - வணங்குகிறேன்
இதுவே காயத்ரியின் பொருள். இதையே தாசராயர் முதல் ஸ்லோகத்தில் விளக்கியிருப்பார். அதாவது, ‘தியோயோன: பிரசோதயாத்’ என்பதற்கு நிகராக ‘கருணிபுதெமகெ மங்களவ’ என்று சொல்லலாம். எந்த பரமாத்மன் நமக்கு நல்லறிவைக் கொடுத்து, அந்த வேலைகளை செய்வித்து, அதற்கான பலன்களையும் கொடுக்கிறானோ, அத்தகைய பரமாத்மன் நமக்கு மங்களத்தை தரட்டும் என்று கேட்கிறார் என்பதை அறியவேண்டும். (யார் நமக்கு புத்தியைக் கொடுக்கிறானோ, அவனை வணங்குகிறேன். எனக்கு மங்களத்தையும் கொடுக்க வேண்டும் என்று அவனையே வேண்டுகிறேன்).
தேவஸ்ய சவிது: என்னும் சொற்களுக்கு படைத்தல் முதலான தொழிலை செய்பவன் என்று பொருள். இதற்கு சமமாக ‘நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே’ எனலாம். வரேண்யம் என்றால் அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவன் என்று பொருள். இதற்கு சமமாக - ’பிரம்ம சமீரவாணி பணீந்திர வீந்திர பவேந்திர முகவினுத’ எனலாம். பர்க: என்றால் கஷ்டங்களைப் போக்குபவன், ஒளிமயமானவன் என்று பொருள். இதற்கு சமமாக - ’நாரசிம்மனே’ எனலாம். அஞ்ஞானத்தை விலக்கும் விஷயத்தில் சிம்மத்தைப் போலிருப்பவன். அல்லது நாரனாக (தோஷங்கள் இல்லாதவன்), முக்தர்களின் நடுவில் அவர்களுக்கு தலைவனாக, ஒளிமயமாக இருப்பவன் என்று பொருள்.
தீமஹி என்னும் சொல்லிற்கு, பிரம்மசூத்திரத்தில் இருக்கும் ‘அதாதோ பிரம்மஜிக்ஞாஸா ! ஜன்மாத்யஸ்யயத: ! சாஸ்திரயோனித்வாத் ! தத்து சமன்வயாத்’ என்னும் நான்கு சூத்திரார்த்தங்களை இந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். ஆக, பாகவத, பாரத, நிர்ணயாதி கிரந்தங்களும் இதில் அடங்கியிருக்கின்றன என்று உணரலாம். இந்த ஸ்லோகத்தை ‘சந்தி சூசனை’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது, இந்த சந்தியில் எதை விளக்குகிறேனோ, அதன் பொருளையே இந்த ஸ்லோகத்தில் அடக்கியிருக்கிறேன் என்கிறார்.
மத்வ மதத்தினர் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இந்த சந்தியில் அடக்கியிருக்கிறார். அது என்னவென்றால் - ‘ஸ்ரீமன் மத்வமதே ஹரி: பரதர: சத்யம் ஜகத்தத்வதோ பேதா ஜீவகணா: ஹரேரனுசரா: நீசோச்ச பாவம் கதா: ! முக்திர்னைவ சுகானுபூதிரமலாம் பக்திஸ்ச தத்சாதனம் ஹ்யக்ஷாதி த்ரிதயம் பிரமாணமகிலம் நாயைக வேத்யோ ஹரி:’
இதன் பொருள்:
ஸ்ரீமன் மத்வ மதத்தில், ஹரியே சர்வோத்தமன். ஜகத் சத்தியம் (உண்மை). ஜீவகணர்களில் பேதம் உள்ளது. அவர்கள் பரமாத்மனின் கிங்கரர்கள் (அதீனர்கள்). தாரதம்யத்தில் இருப்பவர்கள். ஸ்வரூபானந்தத்தைக் காண்பதே முக்தி. திடமான பக்தியே முக்திக்கு சாதனம். பிரத்யட்சம், ஆகமம், அனுமானம் என்பவை மூன்று ஆதாரங்கள். இந்த விஷயங்களையே இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார். நாரசிம்ஹனே என்னும் பதத்தினால் ‘ஹரி’ சர்வோத்தமன் என்பதை நிரூபித்திருக்கிறார். ‘நாரசிம்ஹ’ என்னும் சொல்லின் வியாக்யானத்தால் இந்த அர்த்தங்கள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பிரளய காலத்திலும்கூட முக்தர்கள் இருப்பதால், அப்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பவன் பரமாத்மனே. ஆக, பரமாத்மனும், முக்த பிரம்மாதிகளும் அனாதி காலத்திலும் இருப்பதால் ‘ஜகத் மித்யா’ என்று சொல்வதற்கில்லை. ஆகையால், ஜகத் சத்யம் என்று அறியவேண்டியிருக்கிறது. பிரம்மாதி ஜீவகணங்களால் கூடிய, சேதன அசேதனர்களால் நிரம்பிய இந்த உலகம் உண்மையானது என்னும் விஷயத்தில், நாரசிம்ஹ என்னும் சொல்லினால், முக்தியில் ஆதரவு கொடுப்பவன் என்னும் குணங்களை குறிப்பதாலும், பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவன் என்று சொல்வதாலும், ஜகத் சத்யம் என்று சொல்ல வேண்டும்.
பிரபஞ்சம் பஞ்ச பேதாத்மகம் என்பதை ஸ்ரீரமணிகரகமலபூஜித, பிரம்ம சமீர வாணி இத்யாதி வர்ணனைகளால், லட்சுமி பிரம்மாதி ஜீவராசிகளுக்கும் பரமாத்மனுக்கும் பேதம் இருக்கிறது என்று சொல்லியாயிற்று. அரசன் மற்றும் அரசனின் கீழ் இருப்பவர்களுக்கு எப்படி பேதம் இருக்கிறதோ, அப்படியே ஸ்வாதந்த்ர - அஸ்வாதந்த்ர பேதங்களால், ஜீவ பரமாத்மனுக்கு நடுவில் பேதம் இருக்கிறது என்று அறியவேண்டும். பிரம்ம, சமீரவாணி என்று சொல்லி, லட்சுமி, பிரம்ம, வாயு என்னும் இவர்களிடமும், அதாவது ஜீவ ஜீவர்களுக்கு இடையே பேதம் இருக்கிறது என்றும் சொல்லியாயிற்று.
நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே என்று சொல்லி, பிரம்மாண்டாதி ஜடங்களுக்கும், பரமாத்மனுக்கும் பேதம் இருக்கிறது என்று சொல்கிறார். பானைக்கும் பானை செய்பவருக்கும் எப்படி பேதம் இருக்கிறதோ, அப்படியே பரமாத்மனிடமிருந்து ஸ்ருஷ்டியான பிரம்மாண்டத்திற்கும் பரமாத்மனுக்கும் பேதம் உள்ளது. பிரம்மாண்டாதி ஜடங்களுக்கும் பிரம்மாதி ஜீவராசிகளுக்கும் பேதம் இருக்கிறது என்று மேற்சொன்ன விஷயங்களிலிருந்தே அறியலாம். பிரம்ம, சமீரவாணி முதலான வாக்கியங்களால் பிரம்ம, வாயு ஆகியோரின் ஜடதேகங்களுக்கும் பரஸ்பரம் பேதம் இருக்கிறது.
இப்படியாக : 1. ஜீவ பரமாத்ம பேத. 2. ஜீவ ஜீவ பேத. 3. ஜீவ ஜட பேத. 4. ஜட பரமாத்ம பேத. 5. ஜட ஜட பேத. என்னும் ஐந்து பேதங்களை முக்கியமாக அறியவேண்டும் என்று சொல்கிறார். மேலே சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளிலேயே அதாவது: ஸ்ரீரமணி, பிரம்ம, சமீர, ஆகிய சொற்களால் ரமா பிரம்மாதிகள் அனைவரும் பரமாத்மனின் கிங்கரர்கள் என்று அறியலாம். மற்றும் இதிலிருந்தே ’பவேந்திரமுகவினுத’ என்னும் சொல்லால் ரமா, பிரம்மாவிலிருந்து இந்திரன் வரை தாரதம்யத்தை சொல்லி, ‘இந்திரமுகவினுத’ - ‘முக’ என்று சொல்லி, மனுஷ்யோத்தமர்கள் வரை தாரதம்யத்தை சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும். இப்படியான தாரதம்யத்தை தெளிவாக அறிந்துகொள்வதால், தூய்மையான பக்தி உண்டாகிறது. {இதை நிறுவும் பிரத்யட்சம் முதலான ஆதாரங்கள், இந்த பத்யத்தின் துவக்கத்திலேயே விளக்கப்பட்டுள்ளது).
ஆகையால், ஸ்வரூபானந்தத்தைக் கொடுப்பவனான என்பதை கைவல்யத்தைக் கொடுப்பவனான (கைவல்ய தாயக) என்று சொல்லலாம். ஸ்வரூபானந்தத்தைக் கொடுப்பவன் என்பதை மங்களத்தைக் கொடுப்பவன் என்னும் சொல் விளக்குகிறது. இப்படி, முதல் பத்யத்திலேயே சந்தியின் நோக்கத்தை முழுமையாக காட்டியிருக்கிறார் தாசர் என்பதை அறியலாம்.
இப்படியாக, சாட்சாத், ஜகதீஷ்வரனான ஸ்ரீபரமாத்மனுக்கு முதல் பத்யத்திலிருந்து, மங்கள ரூபமான நமஸ்காரத்தை செய்து, பிறகு பாக்யத்தைக் கொடுக்கக்கூடிய ரமாதேவியரை வணங்கியிருக்கிறார். ‘ஸ்ரீரமணிகரகமல பூஜித’ என்னும் பத்யத்தில், லட்சுமிதேவியரால் வணங்கப்படுபவனான பரமாத்மனை தானும் வணங்கியிருக்கிறார். ஆகையால், லட்சுமிதேவியருக்கு தனியாக நமஸ்காரத்தை செய்யாமல் ‘ஸலஹலி’ (காப்பாற்றட்டும்) என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
லட்சுமி நரசிம்மன் என்று ஏன் சேர்த்து வணங்கவேண்டும்? லட்சுமிதேவிக்கு தனியாக ஏன் நமஸ்காரம் செய்யவில்லை என்றால், லட்சுமிதேவியை விட்டு, பரமாத்மனுக்கு தனியாக பூஜை முதலானவைகளை செய்தால், அதை பரமாத்மன் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், பரமாத்மனை விட்டு லட்சுமிதேவிக்கு பூஜைகளை செய்தால், அதை அவள் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், பாகவதம் மற்றும் ஹரிவம்சங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஹரிவம்சத்தில் ‘ஆஸ்சர்யோபாக்யானம்’ என்னும் இதிகாசம் உண்டு. அதை நிர்ணயத்தின் 20வது அத்யாயத்தில் 33 முதல் 77 வரையிலான ஸ்லோகங்களில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பார். அதன் விஷயம் என்னவென்றால்:
ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் வசித்திருந்தபோது, அதன் அழகினைக் கண்டு மகிழவேண்டும் என்று பல தேசங்களிலிருந்து பல அரசர்கள் அங்கு வந்தனர். அவர்களில் பாண்டவர்கள், கௌவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் ஸ்ரீகிருஷ்ணன், ரைவத பர்வதத்திற்கு அழைத்து வந்து, தகுந்த உபசாரங்களை செய்து, அவர்களுடன் பேசியவாறு அமர்ந்திருந்தான். அப்போது அந்தரிக்ஷத்திலிருந்து இறங்கி வந்து, நாரதர், ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, ‘நீ ஆச்சரியன். தன்யன்’ என்று கூறினார். ‘நீயே சர்வோத்தமன். உனக்கு சமமானவர்கள் யாரும் இல்லை’ என்பதே இதன் பொருள். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் ‘தக்ஷிணாபிஸ்ஸாகம்’ என்று பதிலளித்தான். நாரதர் அதனை ஆமோதித்தார்.
இதற்கு என்ன பொருள் என்று அங்கிருந்த அரசர்கள் புரியாமல் முழிக்க, அவர்களுக்கு அதை விளக்கவும் என்று நாரதரிடம் ஸ்ரீகிருஷ்ணன் கேட்டுக்கொண்டான். அப்போது நாரதர் ‘அரசர்களே கேளுங்கள். ஒரு நாள் நான் கங்கை நதியில், மலை போன்ற ஒரு பெரிய ஆமையைக் கண்டேன். அதைக் கண்டு வியப்படைந்தேன். அதனிடம் ‘நீ மிகவும் ஆச்சரியமான பிராணி. நீயே தன்யன்’ என்றேன். அதற்கு அந்த ஆமை ‘ஹே நாரதரே. அல்பனான என்னை எப்படி வர்ணித்தீர்? இந்த கங்கையைப் பார். என்னை போன்ற எவ்வளவு பிராணிகளைக் கொண்டிருக்கிறது. அவளுக்கு முன் நான் எவ்வளவு சிறியவன்’ என்று சொன்னது. அப்போது நான் கங்கையை வணங்கி ‘நீ மிகவும் ஆச்சரிய ஸ்வரூபள். நீயே தன்யள்’ என்றேன். அதற்கு கங்கையானவள் ‘என்னைப் போல பல நதிகளைக் தன்னுள் அடக்கியிருக்கும் கடல் எவ்வளவு பெரியது?. அதற்கு முன் நான் மிகவும் சிறியவள்’ என்றாள்.
நான் அங்கிருந்து புறப்பட்டு நேராக வருணனிடம் சென்று ‘ஆச்சரியன், தன்யன்’ என்றேன். அப்போது வருணன், தன்னைப் போன்ற பல கடல்களை தன்னுள் அடக்கியிருக்கும் பூமியைக் காட்டினான். பின், பூமி ஸ்வரூபளான உமாதேவியை வணங்கினேன். ‘என்னை ஒரு பாய் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன பர்வதங்கள்’ என்றாள். பர்வதா அபிமானிகளான கருட, சேஷ, ருத்ர தேவதைகளைக் கண்டு ‘நீங்கள் ஆச்சரிய ஸ்வரூபர்கள். தன்யர்’ என்றேன். அதற்கு அவர்களோ ‘ நம்மைப் போல பல பர்வதங்களைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டம் இருக்கும்போது நம்மை ஏன் புகழ்கிறீர்கள்?’ என்றனர். ஆகவே நான், பிரம்மாண்டத்தையே தேகமாகக் கொண்டிருக்கும் பிரம்மதேவரே உத்தமர் என்று அறிந்து, அவரை வணங்கினேன். அவரோ, வேதங்களே உத்தமமானவை என்று கூறினார். ஆகவே, வேதரூபமான லட்சுமிதேவியை வணங்கினேன். அவளோ யக்ஞத்தை போற்றினாள்.
யக்ஞரூபியான ஸ்ரீமன் நாராயணனே, ஸ்ரீகிருஷ்ணரூபியாக அவதரித்திருக்கிறான். அவனிடம் சென்றால் என் பிரச்னை தீரும் என்று நினைத்து நான் இங்கு வந்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி ‘நீ ஆச்சர்ய ஸ்வரூபன். நீயே தன்யன்’ என்றேன். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் ‘தக்ஷிணாபிஸ்ஸாகம்’ என்று பதிலளித்தார். இங்கு என் பிரச்னை தீர்ந்தது. இதன் பொருள் என்னவென்றால், யக்ஞத்தையே பெரியது என்று நினைத்தால், தக்ஷிணையுடன் கூடிய யக்ஞமே பெரியதாகும். யக்ஞம் என்றால் பரமாத்மன். அவனே ஸ்ரீகிருஷ்ணன். அந்த ஸ்ரீகிருஷ்ணன் சொன்னது ‘தக்ஷிணைகளால் கூடிய நான் தன்யன்’. தக்ஷிணை என்றால் ஸ்ரீலட்சுமிதேவியின் பெயர். அது எப்படி என்றால் (மகாபாரத தாத்பர்ய நிர்ணய அத்தியாயம் 20) :
சர்வோத்தம: கிண்டுயதாது ஸாமே வாமார்த்தரூபா தக்ஷிணா நாமதேயா |
யஸ்மாத்தஸ்யா: தக்ஷிணத: ஸ்திதோஹம் தஸ்மான்னாம்னா தக்ஷிணேத்யேவ ஸாஸ்யாத் ||73
இதன் பொருள் என்னவெனில்: நான் எப்போதும் உத்தமனே ஆனாலும், ஸ்ரீலட்சுமிதேவி எப்போதும் என் இடது பக்கத்தில் பாதி சரீரத்தைக் கொண்டு, எனது பாதி உடலாகவே காட்டிக்கொள்கிறாள். அவள் என் தக்ஷிண பாகத்தில் (எப்போதும் வலது பக்கத்தில் இருப்பதால், அவளுக்கு தக்ஷிணா என்றும் பெயர் உண்டு. அவள் என் உடலில் பாதியை எடுத்துக் கொண்டிருப்பதால், அவளுக்கு அர்த்த நாராயணி என்றும் பெயர் உண்டு) எப்போதும் இருக்கிறாள் என்று பரமாத்மா சொல்கிறார். ஆகையால், தான் எப்போதும் லட்சுமிதேவியுடனேயே பூஜையை ஏற்றுக்கொள்பவன் என்று சொல்கிறான்.
’‘தக்ஷிணாபிஸ்ஸாகம்’ தக்ஷிணைகளால் என்று பன்மை எதற்கு? அதாவது, அவதார ரூபங்களை, மூல ரூபங்களை வணங்குவதற்காக, லட்சுமிதேவி பல ரூபங்களை தரித்திருக்கிறாள்’ என்று நாரதர் கூறினார். பிறகு, அங்கிருந்த அனைவரும் ருக்மிணி சமேத ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினர் என்று நிர்ணயாதி கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, லட்சுமி சமேதனான பரமாத்மனையே பூஜிக்க வேண்டும் என்ற் விதியின்படி, தாசர் லட்சுமி சமேதனான பரமாத்மனை முதலாம் பத்யத்தில், பாக்யத்தைக் கொடுப்பவளான ரமாதேவியிடம், தமது இஷ்டார்த்த சித்திகளைக் கொடுக்குமாறு வேண்டுகிறார்.