ப்ராய த4னமத3தி3ந்த3 ஜனரிகெ3
நாயக ப்ரபு4வெம்பி3 பூர்வதி3
தாயி பொட்டெயொளிரலு ப்ரபு4வெந்தே3கெ கரெயரெலெ
காய நின்னனு பி3ட்டுபோக3லு
ராய நீனெம்புவ ப்ரபு4த்வ ப
லாயனவனைதி3து ஸமீபத3லித்த3ரத3 தோரு ||21
ப்ராய தன மததிந்த = வாலிப, செல்வ கர்வத்தினால்
ஜனரிகெ = மக்களுக்கு
நாயக = நான் நாயகன்
ப்ரபு = நான் முதல்வன்
மெம்பி = என்னும்
பூர்வதி = இதற்கு முன்
தாயிபொட்டெயொளிரலு = தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது
ப்ரபுவெந்து ஏகே கரெயரெலெ = (நீயே முதல்வனாக
இருந்தால், தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது) உன் ஆளுமை எங்கே போயிற்று?
காய நின்னனு பிட்டுபோகலு = இந்த தேகம் உன்னை விட்டுப்
போனபிறகு
ராய நீனெம்புவ ப்ரபுத்வ = நீயே தலைவன் என்று சொல்லும்
உன் ஆளுமை
பலாயனவனைதிது = தோற்று ஓடிப்போயிற்று
சமீபதலித்தரத தோரு = அந்த ஆளுமை, உன் அருகில் இருந்தால், அதனை நீ காட்டு.
உலகத்தில் மக்கள், வாலிபம், செல்வம் இந்த இரண்டின் கர்வத்தினால், நானே அனைவரையும் காப்பாற்றுகிறேன்.
நானே தலைவன் என்று சொல்லும் வழக்கம் உண்டு. நான் தலைவன் என்று சொல்வது அவர்களின்
ஸ்தூல தேகத்தைப் பார்த்தா அல்லது ஜீவனைப் பார்த்தா? தேகத்திற்கு பிரபுத்வம் கொடுத்தால், தாயின் கர்ப்பத்தில் இந்த தேகம்
பூர்ணமாக இருந்தபோதும், குழந்தையாக இருந்தபோதும் இதே
சரீரம்தானே இருந்தது? அப்போது பிரபு என்று ஏன் யாரும் சொல்லவில்லை? பாகவத 1ம் ஸ்கந்தத்தில் :
காலகர்மகுணாதீனோ தேஹோயம் பாஞ்சபௌதிக: |
கதமன்யாம்ஸ்து கோபாயேத் ஸர்ப்பக்ரஸ்தோ யதாபரம் ||
இந்த தேகத்தை பிரபு என்று சொன்னால், நாளடைவில் கண், காது முதலான இந்திரியங்கள் ஏன் நம்மை விட்டுப் போகின்றன? அவற்றின் மேல் நம் பிரபுத்வம் ஏன் இல்லை? சரீரம் நம்மை விட்டு ஏன் போகின்றது? ஆகையால், இந்த சரீரம், கால,
கர்ம,
குணங்கள் இவற்றின் அதீனத்தில் இருக்கும் பஞ்சபூத சம்பந்தப்பட்டவை. இத்தகைய
சரீரத்தால், நாம் இன்னொருவரை காப்பாற்றுகிறோம் என்று சொல்வது, ஒரு பாம்பின் வாயில் சிக்கியிருக்கும் தவளையானது, இன்னொரு பாம்பின் வாயில் சிக்கியிருக்கும் தவளையைப் பார்த்து, நான் உன்னை காப்பாற்றுகிறேன் என்று சொல்வது போலாகும். இதுவே மேலின பாகவத ஸ்லோகத்தின்
அர்த்தம்.
ஆகையால், பிரபுத்வம் தேகத்திற்கு இல்லை
என்று சொல்லியாயிற்று. பின், ஜீவனை பிரபு என்று சொல்லலாம்
என்றால்,
இந்த தேகம் ஜீவனை விட்டுப் போனபிறகு, ஜீவனின் பிரபுத்வம் எங்கு போகிறது? ஆகையால், ஜீவன் பிரபு அல்ல. பின் எதை பிரபு என்று சொல்வது? தேகம் உள்ள ஜீவன் என்றால், தேஹியே பிரபு என்று சொல்ல
வேண்டும். இந்த தேஹிக்காவது, மழலை, முதுமைகளில் பிரபுத்வம் வருகிறதா என்றால் இல்லை. முன்னும் இல்லை. பின்னும்
இல்லை. இவற்றிற்கு நடுவில் நமக்குள் இருந்து, பிம்பரூபியான பரமாத்மன் செய்யும் பிரபுத்வத்தை, யௌவனத்தின் கர்வத்தில் மறந்து, நானே பிரபு என்று சொல்வர். பாகவத 10ம் ஸ்கந்தத்தின் பிற்பாதியில் இருக்கும் முசுகுந்த ஸ்துதியில் முசுகுந்த ராஜன்
சொல்வது இது:
புராரதைர்ஹேம பரிஷ்க்ருதைஸ்சர்ய மதங்க ஜைர்வானரதேவ
ஸங்ஞித: |
ஸ ஏவ காலேன துரத்யயோனவை களேவரோவிட் க்ரிமிபஸ்ம
ஸங்ஞித: |
முன்னர், தங்கமயமான திவ்ய ரதத்தில் அல்லது
யானைகளின் மேல் அமர்ந்து, யார் தன்னை ராஜாதிராஜன் என்று
புகழ்ந்து கொள்கிறானோ, காலத்திற்கேற்ப அவன் அந்த ராஜ தேகத்தை விட்டபிறகு, அதில் இருக்கும் ராஜத்வம் போய், விட் என்றால் கிருமி அல்லது
சாம்பலாகிறது. இந்த சரீரத்தை, சாம்பலாக்காமல் அப்படியே
விட்டுவிட்டால், நாய் நரிகள் தின்று பின் மலரூபமாக காட்சியளிக்கிறது. அல்லது அதில் புழுக்கள்
ஊர்ந்து போகின்றன. எரித்தால் சாம்பலாகிறது. இப்படிப்பட்ட காலங்களில் அந்த ராஜத்வம்
எங்கு போனது என்பது முசுகுந்த ராஜனின் வாக்கியம். ஆகையால், ப்ரபுத்வம் போன்ற சொற்கள், அந்தர்யாமியாக இருக்கும்
பரமாத்மனுக்கு பொருந்துமே தவிர, தேஹிகளுக்கு என்றும் பொருந்தாது
என்பது கருத்து.
வாஸுதே3வைக ப்ரகாரதி3
ஈஷனெனிஸுவ பி3ரம்ம ருத்3ர ஷ
சீஷ மொத3லாத3 மரரெல்லரு தா3ஸரெனிஸுவரு |
ஈஸுமார்க்க3வ பி3ட்டு ஸோஹமு
பாஸனெய கை3வனர தே3ஹஜ
தை3ஷிக க்லேஷக3ளு ப3ரலவனேகெ பி3டி3ஸிகொள ||22
வாஸுதேவனு = வாசுதேவ நாமக ஸ்ரீபரமாத்மன்
ஏகப்ரகாரதி = ஒரே மாதிரியாக
ஈஷனெனிஸுவ = ஈஸ்வரன் என்று அழைத்துக் கொள்கிறான்
பிரம்ம ருத்ர ஷசீஷ = பிரம்ம, ருத்ர, இந்திரன்
மொதலாத அமரரெல்லரு = முதலான தேவதைகள்
தாசரெனிஸுவரு = அவனுக்கு தாசர்கள் எனப்படுவர்
ஈ சுமார்க்கவ பிட்டு = இப்படியான உபாசனை செய்வதற்கான
நல்ல மார்க்கத்தை விட்டு
ஸோஹமுபாஸனெய = அந்த பரமாத்மனே நான் என்னும் உபாசனையை
கைவ = செய்யும்
நர = மனிதன்
தேஹஜ = தேக சம்பந்தமான
தைஷிக = தேச சம்பந்தப்பட்ட
க்லேஷகளு = துக்கங்கள்
பரலு = வந்தால்
ஏகே = எப்படி
பிடிஸிகொள = விடுவித்துக் கொள்ள மாட்டான்.
பாகவத 11ம் ஸ்கந்தம் 2ம் அத்தியாயத்தின் உரையில் :
பூர்ணத்வாதாத்ம ஷப்தோக்த: கஸ்சித்ஸர்வ நரோத்தம: |
ஸோபி நாராயணோனான்ய: ஸச ஸர்வேஷு சம்ஸ்தித: ||
தத்வகா இதரேஸர்வே ஸ்ரீப்ரம்மேஷ புரஸ்ஸரா: ||
இதி பஷ்யதி யோ புத்யா ஸதுபாகவதோத்தம: ||
பூர்ண குணாத்மகனாகையால் ஆத்ம என்று பெயர். அவன் சர்வ
பிராணிகளைவிட உத்தமன். அவன் யார் என்றால், நாராயணனே தவிர, வேறு யாரும் அல்ல. அவனே அனைவரின் அந்தர்யாமியாக இருக்கிறான். லட்சுமிதேவி, பிரம்ம ருத்ராதி அனைத்து தேவதைகளும் அவன் அதீனராகவே இருக்கின்றனர் என்று யார்
உபாசனை செய்கிறானோ, அவனே பாகவதோத்தமன் என்று சொல்கிறார்.
அதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார்.
பரமாத்மன் ஒருவனே சர்வேஸ்வரன். பிரம்ம ருத்ரேந்த்ராதி தேவதைகள் அனைவரும் அந்த
பரமாத்மனுக்கு சேவகர்கள் என்று உபாசனை செய்வதே சத்-உபாசனை. இத்தகைய உபாசனையை
விட்டு ‘ஸோஹம்’ அவனே நான் என்னும் உபாசனையை செய்பவர்கள் தமோ யோக்யர்கள். பரமாத்மனே ஜீவன்
என்று சொல்வது பொய்யானால், மித்யோபாசனையால் தமஸ் கிடைக்கும்.
ஒரு வேளை அது உண்மையானால், என்ன பிரச்னை என்றால், என்றைக்கும் அது உண்மை ஆவதில்லை என்று ‘தேஹஜ’
என்னும் வாக்கியத்தால் சொல்கிறார். உண்மையாக நாமே பரமாத்மனானால், ஆனந்த ஸ்வரூபனான பரமாத்மனுக்கு துக்கம் உண்டாகிறது. மனிதர்களுக்கு தேக
சம்பந்தமான வயிற்றுவலி, கண் பார்வை பறிபோதல் ஆகிய
துக்கங்களே ஆகட்டும், கால சம்பந்தமான ஜலதோஷம், ஜுரம் ஆகிய தோஷங்களே ஆகட்டும்
வரும்போது அதனை ஏன் அனுபவிக்க வேண்டும்? தானே ஈஸ்வரன் என்றானபிறகு, அந்த துக்கங்கள் தன்னை பாதிக்காமல் இருக்கச் செய்யமுடியாதா? அத்தகைய சக்தி இவனுக்கு இல்லை என்றபிறகு, இவன் எப்படி ஈஸ்வரன் ஆகமுடியும்? ஆகையால், ஜீவன், ஈஸ்வரன் என்று என்றைக்கும் சொல்லமுடியாது என்பது கருத்து.
ஆ பரபி3ரம்மனலி த்ரிஜக3
த்3வ்யாபகத்வ நியாமகத்வ
ஸ்தா2பகத்வ வஷத்வ ஈஷத்வாதி3 கு3ணக3ளிகெ3 |
லோபவில்லைக ப்ரகார ஸ்வ
ரூபவெனிபுவு ஸர்வகாலதி3
போபவல்லவு ஜீவரிகெ3 தா3ஸத்வதோ3பாதி3 ||23
ஆ பரபிரம்மனலி = பரமாத்மனான ஸ்ரீ நாராயணனிடம்
த்ரிஜகத் வியாபகத்வ = மூன்று உலகங்களிலும்
வியாபித்திருக்கும் தன்மை
நியாமகத்வ = வழிநடத்தும் தன்மை
ஸ்தாபகத்வ = ஒரே நிலையில் வைக்கும் தன்மை
வஷத்வ = மக்களை தன் அதீனத்தில் வைத்துக்கொள்ளும்
தன்மை
ஈஷத்வாதி = தலைவனாக இருக்கும் தன்மை
குணகளிகெ = போன்ற குணங்களுக்கு
லோபவில்ல = குறைவில்லை
ஏக ப்ரகார = ஒரே மாதிரியாக
ஸ்வரூபவெனிபுவு = பரமாத்மனுக்கு ஸ்வரூபபூதமாக
இருக்கின்றன
ஸர்வகாலதி = அனைத்து காலங்களிலும்
ஜீவரிகெ தாசத்வதோபாதி = ஜீவர்களுக்கு தாசத்வம் எப்படி
போவதில்லையோ, அப்படி
போபவல்லவு = போகும் தன்மை கொண்டது இல்லை.
பரமாத்மன் மூன்று உலகங்களின் உள்ளும், வெளியேயும் நிலைத்திருக்கிறார். பிரம்மாதி தேவதைகளுக்கு மூன்று உலகங்களில்
வியாபித்திருக்கும் சக்தி இருந்தாலும், அவர்கள் ஸ்வதந்த்ரர் அல்ல.
அஸ்வதந்த்ரர்கள். பிரம்மாதிகளுக்கு நியாமத்வ இருந்தாலும், அவர்கள் பகவத் அதீனராக, பகவந்தனின் ஆணையின்படியே, அவன் கொடுத்த சக்தியினாலேயே நியாமகராக இருக்கிறார்கள். பரமாத்மன் ஸ்வதந்த்ர
நியாமகன்.
பிரம்மாதி அனைத்து ஜீவர்களையும், நீங்கள் இப்படியே இருக்க வேண்டும் என்று அவர்களை தன் வசத்தில் வைத்துக்கொண்டு, அனைவரின் யோக்யதைக்கேற்ப அவர்கள் இருக்குமாறு செய்கிறான். இந்த அதிகாரம் எந்த
ஜீவருக்கும் இல்லை. பரமாத்மன் சர்வேஸ்வரன். ஜீவனே பரமாத்மனாக இருந்தால், இத்தகைய குணங்கள் அவனிடம் எப்போதும் இருக்க வேண்டியதாயிற்று. ஆனால் அப்படி
இல்லை. ஜீவன் எப்போதும் அபூர்ணன். ஜீவனுக்கு தாசத்வம் எப்படி நித்யமோ, அப்படியே பரமாத்மனுக்கு பிரபுத்வாதி குணங்கள் நித்யம். இத்தகைய ஸ்வாமி நானே
என்று உபாசனை செய்தால், அவனுக்கு துக்ககரமான தமஸ்ஸே
கிடைக்கிறது.
நித்ய நூதன நிர்விகார ஸு
ஹ்ருத்தம ப்ரணவஸ்த2 வர்ணோ
த்பத்தி காரண வாங்மனோமய ஸாமகா3னரத |
த3த்த கபில ஹயாஸ்ய ரூபதி3
ப்ருத2க் ப்ருத2க் ஜீவரொளகி3த்து3 ப்ர
வர்த்திசுவனவரவர யோக்3யதெ கர்மவனுஸரிஸி ||24
நித்ய நூதன = தினமும் பார்த்துக் கொண்டிருக்கும்
லட்சுமி தேவியருக்கும் புதிதாகவே தெரிபவன்
நிர்விகார = தேக மாறுதல்கள் இல்லாதவன்
ஸுஹ்ருத்தம = உயிர் நண்பன்
ப்ரணவஸ்த = ஓம்காரத்தில் இருக்கும்
வர்ணோத்பத்தி காரண = அ,உ,ம என்னும் வர்ணங்களின் காரணன்
வாங்மனோமய = வாங்மய, மனோமய என்று அழைக்கப்படுபவன்
ஸாமகானரத = சாமகான ப்ரியன்
தத்த கபில ஹயாஸ்ய ரூபதி = தத்தாத்ரேய, கபில,
ஹயக்ரீவ ரூபத்தில்
ப்ருதக் ப்ருதக் = தனித்தனியாக
ஜீவரொளகித்து = ஜீவர்களில் இருந்து
அவரவர = அவரவர்களின்
யோக்யதெ கர்மவனுசரிஸி = யோக்யதை, கர்மங்களை அனுசரித்து
ப்ரவர்த்திஸுவனு = செய்ய வேண்டியவற்றை செய்து, செய்விக்கிறான்.
ஸ்ரீபரமாத்மன் தினமும் புதிதாக இருப்பவன்.
நித்யம் நிரீக்ஷ்யமாணானாம் யத்யபி: த்வாராகௌகஸாம் | நவித்ருப்யந்திஹித்ருஷ: ||
த்வாரகையில் இருப்பவர்கள் தினந்தோறும் ஸ்ரீகிருஷ்ணனை
பார்த்துக் கொண்டிருந்தாலும், அவன் எப்போதும் புதியவனாகவே
தெரிந்ததால், எவ்வளவு பார்த்தாலும் கண்கள் திருப்தி அடையவேயில்லை என்று பாகவத 10ம் ஸ்கந்தத்தில் சொல்லியிருப்பர். ஆகையால், பரமாத்மன் நித்யநூதனன். இத்தகைய குணம் வேறு எந்த ஜீவர்களுக்கு இருக்கிறது?
வயது ஆகஆக, ஸ்தூல தேகத்தில் மாறுதல்கள்
வந்துகொண்டே இருக்கின்றன. அத்தகைய மாறுதல்கள் பரமாத்மனின் எந்த ரூபங்களுக்கும்
இல்லை. ஆகையால், பரமாத்மன் நிர்விகாரன்.
ஸுஹ்ருத்தம என்றால் ‘நித்யம்ப்ராண ஸம:ஸுஹ்ருத்’ என்னும் வாக்கியத்திற்கேற்ப, தன் உயிரைவிட மேலானவன் என்று யாரை நினைக்கிறானோ அவனே ஸுஹ்ருத்தமன். பரமாத்மன், ப்ராணனைவிட அதிக ப்ரியமானவன் ஆகையால், அவனே ஸுஹ்ருத்தமன்.
ப்ரணவத்தின் ஓம் என்னும் எழுத்தில், அ,உ,ம என்னும் மூன்று எழுத்துக்கள் சேர்ந்திருக்கின்றன. இவை மூன்றும் முதன்முதலில்
பரமாத்மனிடமிருந்து தோன்றின.
வாங்மய மனோமய என்றால், அனைத்து ஜீவர்களிலும் இருந்து, வாங், மன வியாபாரங்களை செய்விப்பவன் என்று பொருள்.
வேதானாம் ஸாமவேதோஸ்மி என்னும் கீதா
வாக்கியத்திற்கேற்ப, வேதங்கள் அனைத்தும் பகவந்தனைக் குறிப்பதே ஆனாலும், விசேஷமாக ஸாமவேதத்தில் பகவன் மகிமை அதிகமாக இருக்கிறது. ஆகையால், ஸாமகானரத என்றார்.
தத்தாத்ரேய, கபில, ஹயக்ரீவ ரூபங்களால் அனைத்து ஜீவரிலும் இருந்து, அவரவர்களின் ஸ்வரூப யோக்யதைக்கேற்ப, வினைப்பயன்களுக்கேற்ப, அவர் மூலம் செய்யவேண்டிய காரியங்களை செய்து, செய்விக்கிறான்.
இந்த குணங்களில் எந்தவொரு குணமாவது ஜீவனிடம்
இருக்கிறதா? ஜீவன் பரமாத்மன் ஆவது எப்போது? எப்படி? இது எப்போதும் நடக்காத செயல் என்பது கருத்து.
ஸ்ருதிக3ளாதன மாது விமல
ஸ்ம்ருதிக3ளாதன ஷிக்ஷெ ஜீவ
ப்ரததி ப்ரக்ருதிக3ளெரடு3 ப்ரதிமெகளெனிஸி கொளுதிஹவு |
இதர கர்மக3ளெல்ல லகுமி
பதிகெ3 பூஜெக3ளெந்து3 ஸ்மரிஸுத
சதுரவித4 புருஷார்த்த2க3ள பே3ட3தி3ரு ஸ்வப்னத3லு ||25
ஸ்ருதிகளு ஆதன மாது = பரமாத்மனின் வாக்கியங்களே
ஸ்ருதிகள்
விமல = நிர்மலமான
ஸ்ம்ருதிகளு = புராண வாக்கியங்கள்
ஆதன சிக்ஷெ = அவனது ஆணை
ஜீவப்ரததி = மூன்றுவித ஜீவர்கள்
ப்ரக்ருதிகளெரடு = ப்ரக்ருதி, இவை இரண்டும்
ப்ரதிமெகளெனிஸிகொளிதிஹவு = அவனின் பிரதிமைகள் என்று
அழைக்கப்படுகின்றன
இதர கர்மகளெல்ல = மற்ற கர்மங்கள் அனைத்தும்
லகுமிபதிகெ = லட்சுமிபதியான ஸ்ரீ நாராயணனுக்கு
பூஜெகளெந்து = பூஜைகள் என்று
ஸ்மரிஸுத = சிந்தித்தவாறு
ஸ்வப்னதலு = கனவினிலும்கூட
சதுர்வித புருஷார்த்தகள = தர்ம அர்த்த காம மோட்ச
என்னும் 4வித புருஷார்த்தங்களை
பேடதிரு = வேண்டாமல் இரு.
ஸ்ருதிகள் அனைத்தும் பகவந்தனின் வாக்கியங்கள் என்று அறி. புராண வாக்கியங்கள் அனைத்தும் பரமாத்மனின் ஆணைகள் என்று அறி. ஜீவ சரீரங்கள் மற்றும் ப்ரக்ருதி இந்த இரண்டும் பரமாத்மனின் ப்ரதிமைகள் என்று நினை. நீ செய்யும் அனைத்து கர்மங்களையும் பரமாத்மனின் பூஜைகள் என்று அறிந்து பரமாத்மனுக்கு அர்ப்பித்து வா. தர்மாதி நான்குவித புருஷார்த்தங்களை கனவிலும்கூட வேண்ட வேண்டாம். நிஷ்காமகனாக கர்மங்களை செய்ய வேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment